Monday, April 17, 2017

தடுப்பூசி குறித்த சீமானின் அபாயகரமான நிலைப்பாட்டுக்கு ஒரு சவால்....

தடுப்பூசிகள் தேவையே இல்லை, மரபுவழி மருத்துவமும், சுத்தமான காற்று/நீர்/உணவும் நோய்களில்லாத வாழ்வைத்தரும் என்று திரைப்பட நடிகர் சீமான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சொன்னார். யாரும்  சுத்தமான காற்றும், நீரும், உணவும் வேண்டாம் என்றோ, இவற்றால் பயன் இல்லை என்றோ சொல்ல முடியாது. நம்முடைய பிரச்சனை அதுவல்ல. தடுப்பூசிகள் தேவையில்லை என்று முரண்டு பிடிக்கும் முட்டாள்தனமே நம் பிரச்சனை.

நோய்கள் கண்ணுக்குப் புலப்படாத பாக்டீரியா, வைரஸ் மற்றும் இதர நுண்ணுயிரிகளால் வருவதை அவர் மறுக்கிறாரா? நோய்கள் பலவகைப்படும். பிறவிக்கு குறைபாடுகள், சத்துப் பற்றாக்குறை, உடலில் ஏற்படும் மாற்றங்கள், பரம்பரை வியாதிகள், உணவு/வாழ்க்கை முறையினால் வரும் நோய்கள், தொற்று வியாதிகள் என்று பல உள்ளன. இதில், தடுப்பூசிகள் தொற்று நோய்களையே பெரும்பாலும் தடுக்கின்றன. இப்படி இருக்க, சீமானின் பேச்சு, வாழ்க்கைமுறையினால் வரும் நோய்களைப்போல தோற்று நோய்களையும் உணவு, உடற்பயிற்சி போன்ற வழிகளில் சரி செய்துவிடலாம் என்பது போல உள்ளது.

நாம் சற்று பின்னோக்கிப் பார்த்தால், நம் நாட்டு மரபுவழி மருத்துவங்களில்கூட பல தோற்று நோய்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. இந்த நோய்கள் நவீன அறிவியல் மற்றும் செயற்கை உரம்/பூச்சிக்கொல்லி/மாசு ஆகியவை தோன்றும் முன்பே இருந்துள்ளன என்பதற்கு நம் நாட்டு மருத்துவ முறைகளான சித்த/ஆயுர்வேத நூல்களே சான்று. மேலும், வாழ்க்கைமுறை மாற்றங்களால் இன்று நம்மை அதிகம் தாக்கும் நோய்கள்கூட அன்றே இருந்துள்ளன. அவற்றின் அளவு குறைவாக இருந்தது என்பதே சரி. ஆகா, சீமான் சொல்வது சரி என்றால், எதனால் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நம் முன்னோர்கள் தொற்று நோய்களுக்கு கொத்துக் கொத்தாக செத்து மடிந்தனர்?

சரி, இப்போது விஷயத்துக்கு வருவோம்... தலைப்பில் உள்ளபடி, சீமானோ, அவரது தம்பிகளோ தடுப்பூசி இல்லாமல் வெறிநாயிடம் கடிவாங்கி தங்கள் வீரத்தை நிரூபிக்க முடியுமா? வெறிநாய் கடிக்கு எந்த உணவு மருந்தாகும் சீமான் அவர்களே? உங்கள் பாரம்பரியம் பண்பாடு என்ற போலி இனஉணரவுக்கு மயங்கி, தமிழர்களின் பிள்ளைகள் நோய்கள் வந்து உயிரையே, நல்ல உடல் நலத்தையோ இழந்தால் அதற்க்கு நீங்கள் பொறுபேர்ப்பீர்களா? ஒரு சமுதாயத்தையே அறிவுக்குருடராக்குவதே உங்கள் வேலையா?

சீமான் மற்றும் அவர் தமபிகளுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்... ஒருவன் தன்  நம்பிக்கையினால் தான் பெற்ற பிள்ளையை நரபலி கொடுப்பது சரியா? அதுபோலவே உங்கள் போலி இணைப் பெருமிதத்தால் குழந்தைகளின் உயிரோடும் உடல்நலத்தோடும் விளையாடுவதும் தவறே! உங்கள் நம்பிக்கையும் மூட நம்பிக்கையே!