Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Friday, August 11, 2017

"துளிர்"க்கட்டும் அறிவியல் ஆர்வம்

உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தோர்வரை அனைவரும் அறிவியல் ஆர்வம் பெற்றிருப்பது இன்றைய சூழலில் மிக முக்கியமான ஒன்று. ஆனால் சமூக வலைத்தளங்களாகட்டும், தொலைக்காட்சியாகட்டும், அச்சு ஊடகங்களாகட்டும், எங்கு திரும்பினாலும் போலி அறிவியலின் தாக்குதல் எட்டுத்திக்கும் இருந்து சீறிப்பாய்கிறது. திரைப்படங்களைச் சொல்லவே வேண்டாம். "மனிதனின் சராசரி ஆயுள்காலம் 300 வருடம்" என்றெல்லாம் வசனம் பேசி கைதட்டலும் காசும் சம்பாதித்துவிட்டு அவர்கள் தப்பித்துவிடுகிறார்கள், பார்க்கும் நம் மக்களோ அறிவைத்தொலைத்துவிட்டு மூடமயக்கத்தில் தடுமாறுகிறார்கள். அறிவியல் பற்றிய பத்திரிக்கைகள் வெகு சிலவே கிடைக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை விலை அதிகமுள்ளவையாகவும், ஆங்கிலப் பாதிப்புகளாகவும் உள்ளன. தமிழில் ஒரு நல்ல அறிவியல் பத்திரிகை இருந்தால்? அதுவும் அது குறைந்தவிலையில் எல்லோரும் வாங்கிப் பயன்பெறும் வகையில் இருந்தால்? எவ்வளவு நன்றாக இருக்கும்?
அப்படி ஒரு மாத இதழ் இருக்கிறது! தமிழ்நாடு மற்றும் புதுவை அறிவியல் இயக்கங்கள் இணைந்து வெளியிடும் இந்த மாத இதழ், "துளிர்" என்ற பெயரில் வெளிவருகிறது. இதழ் ஒன்றுக்கு 10 ரூபாய் என்கிற நம்பமுடியாத விலையில் கிடைக்கிறது. வெறும் 100 ரூபாய் சந்தா செலுத்தினால் ஒரு ஆண்டு முழுவதும் உங்கள் வீடு தேடியே வரும்! சற்று சிந்தித்துப்பாருங்கள். ஒரு திரைப்படம் பார்க்க இதைவிட அதிகம் செலவாகும். ஒரு சின்ன பொம்மை இதைவிட அதிக விலை இருக்கும். உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கோ, அல்லது உங்கள் உறவினர்/நண்பர்கள் வீட்டுக் குழந்தைகளுக்கோ ஒருவருட சந்தாவைக் கட்டி அவர்கள் வீடுதேடி இவ்விதழ் மாதம்தோறும் வரும்வகையில் ஒரு அன்பளிப்பைத் தரலாம். நீங்களும் இவ்விதழை தொடர்ந்து வாசிப்பதன் மூலம் உங்கள் அறிவியல் அறிவை கூர்மையாக வைத்துக்கொள்ளலாம்.

பள்ளியில் படிக்கும் அறிவியல் கருத்துக்கள் சரியாகப் புரியாமலோ அல்லது அறிவியல் ஆர்வத்தின் மிகுதியிலோ குழந்தைகள் எழுப்பும் கேள்விகள் ஏராளம். ஆனால் பொறியியலோ மருத்துவமோ பயின்ற பெற்றோர்கள்கூட அக்கேள்விகளுக்கு பதிலளிக்கத் தடுமாறும் நிலையில் உள்ளனர். இதுவே அவர்களிடம் ஏதாவது மூடநம்பிக்கைகள் குறித்துக் கேட்டுப் பாருங்கள்? பக்கம் பக்கமாக விளக்குவார்கள். ஆனால், உங்கள் வீட்டில் துளிர் இதழ் இருந்தால், நீங்களும் உங்கள் அறிவியல் அறிவை வளர்த்துக்கொண்டு இளைய தலைமுறைக்கும் பயன்படும் வகையில் அதைப் பயன்படுத்தலாம். வீட்டில் உள்ள தாத்தா பாட்டிகள்கூட தங்கள் ஓய்வு நேரத்தில் "துளிர்" இதழை வாசித்து, அதில் உள்ள தகவல்களை எளிய கதைகளாக குழந்தைகளுக்குச் சொல்லலாம்.

துளிர் அறிவியல் மாத இதழை உங்கள் வீட்டிற்கே வரவழைக்க, கீழ்காணும் வழிகளில் தொடர்புகொள்ளலாம்.

முகவரி:

துளிர் நிர்வாக அலுவலகம்,
245, அவ்வை சண்முகம் சாலை,
கோபாலபுரம்,
சென்னை 600 086

தொலைப்பேசி எண்: 044 28113630

மின்னஞ்சல் முகவரி: thulirmagazine@gmail.com

சந்தா விவரங்கள்:
ஒரு இதழ்: ரூ. 10/-
ஆண்டுச் சந்தா: ரூ. 100/-
ஆண்டுச் சந்தா (வெளிநாடுகளுக்கு): $ 20
ஆயுள்ச் சந்தா: ரூ. 1000/-

Wednesday, August 9, 2017

வந்தேறிச் செடிகள்!

இன்று எல்லாப் பொருட்களிலும் பழமை நல்லது, புதுமை கெட்டது என்று ஒரு கருத்து நிலவுகிறது. ஏதாவது ஒரு புதிய கண்டுபிடிப்போ, உணவோ, மருந்தோ, உடையோ வந்தால் போதும்! "ஐயோ! நம் முன்னோர்கள் பாரம்பரியம் எல்லாம் போச்சே! பழமையை அழித்துவிட்டோமே! புதியவற்றால் தீமைகள்தான் வரும்!" என்றெல்லாம் முட்டி மோதும் கூட்டம் எங்கிருந்தாவது கிளம்பிவருகிறது. இவர்கள் கூற்றின் படி, நம் முன்னோர்களும் புதுமைகளை ஏற்காமல் இருந்திருந்தால் என்னவாகி இருக்கும்?

வேட்டையாடிய மனிதன் விவசாயத்தைக் கண்டுபிடித்தபோது இதேபோல "நம் முன்னோர்கள் விவசாயம் செய்யவில்லை. விவசாயத்தால் காடுகள் அழியும். அரிசி, கோதுமை போன்ற பயிர்கள் செயற்கையாக மனிதனால் உருவாக்கப்பட்டவை. இவற்றை உண்டால் நோய் வரும்!" என்றெல்லாம் போராட்டம் நடந்திருந்தால் என்னவாகி இருக்கும்? அல்லது நெருப்பை மூட்ட மனிதன் கற்ற காலத்தில், "நெருப்பு ஆபத்தானது! அதை நம் வீட்டுக்குள் கொண்டு வருவது கூடாது! அதனால் காற்று மாசு படுகிறது!" என்று ஒரு கூட்டம் கோஷம் போட்டிருந்தால் எப்படி இருக்கும்? இப்படியே சக்கரம், படகுகள், ஆடை, சமைத்த உணவு, உணவில் உப்பு சேர்ப்பது போன்ற ஒவ்வொரு மாற்றத்தையும் பழமைவாதிகள் எதிர்த்திருந்தால் நாம் இன்று மகிழ்ச்சியாக மரத்தில் தாவிக்கொண்டு இருந்திருக்கலாம்!

இப்படிப் பழம்பெருமை பேசும் பலருக்கும், நம் முன்னோர்கள் புதுமையை வரவேற்று ஏற்றுக்கொண்டு முன்னேறியவர்கள் என்பது தெரியாது. இன்று அவர்கள் பழமை என்று தூக்கிப்பிடிக்கும் பலவும் சில நூற்றாண்டுகளுக்கு முன் புதுமையாக நம் முன்னோர்கள் பார்த்தவையே! "நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல!" என்ற இவர்கள் கூற்றுப்படியே பார்த்தாலும், நம் முனோர்களைப் போல நாமும் புதுமையைக் கண்டு அஞ்சாமல், அதை ஆராய்ந்து ஏற்பதே நல்லது.

அவ்வகையில் நம் முன்னோர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன் ஏற்றுக்கொண்ட புதுமைகள் சிலவற்றைப் பார்ப்போம். இந்தப் புதுமைகள் இன்று எவ்வாறு பழமைகளாகப் பார்க்கப்படுகின்றன என்று கவனியுங்கள். ஒரு குறுகிய வலைப்பதிவில் எல்லாவற்றையும் சொல்ல முடியாததால், 1492ஆம் ஆண்டு கிறிஸ்டோபர் கொலம்பஸ், அமெரிக்க கண்டங்களைக் கண்டறிந்த பின், அக்கண்டங்களில் இருந்து ஐரோப்பியர்கள் மூலம் நம் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சில தாவர வகைகளை மட்டும் பார்ப்போம். அதாவது, ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன், இந்தத் தாவரங்களோ அவை தரும் காய்கனிகளோ, நம் முன்னோர்கள் பார்த்திருக்கக் கூட மாட்டார்கள். ஆனால் இந்தப் பட்டியலில் உள்ள பலவும் இன்று நம் "பண்பாடு, பாரம்பரியம், மரபு" வட்டத்துக்குள் இருப்பதைக் கவனியுங்கள். இன்னும் 500 வருடங்களில், பிட்சாவும், நூடுல்சும் நம் பரம்பரியமானாலும் வியப்பதற்கல்ல!

குடை மிளகாய் - சில்லி சிக்கன் முதல் பச்சடி வரை...

முந்திரிப்பருப்பு - இது இன்று நம் பாரம்பரிய உணவாகப் பார்க்கப்படும் ஒன்று. முந்திரி பக்கோடா, முந்திரி அல்வா, முந்திரி ஸ்வீட், பொங்கல், லட்டு, பாயசம்,புலவு என்று நம் பாரம்பரிய உணவுகள் பலவும் முந்திரியால் சிறப்புப் பெறுகின்றன. "முந்திரிக்கொட்டை போல" என்ற வழக்கும்கூட நம் மொழியில் இருப்பது வியப்பே!

மிளகாய் - மீன்குழம்பு, சாம்பார், சட்டினி, வடை, இட்டிலிப் பொடி இப்படி எது எடுத்தாலும் மிளகாய்ப் பொடி இல்லாமல் ருசிக்குமா? ஒருநாள் உங்கள் சமையலறையில் மிளகாய்ப் பொடி டப்பாவை ஒளித்துவைத்துவிட்டு சமையல் செய்ய முயலுங்கள். நீங்கள் தமிழரின் பாரமபரிய உணவுகள் என்று நம்பும் பலவும் இந்த அமெரிக்க இறக்குமதி இல்லாமல் சமைக்க முடியாது! இதில் இந்த மிளகையைக் கொண்டு திருஷ்டி கழிப்பது, வாகனங்களைப் பாதுகாப்பது போன்ற விஞானங்கள் வேறு! 500 வருடங்களுக்கு முன் இல்லாத இந்தப் பழக்கங்கள் இன்று நம் பண்பாடு என்று சொல்லும் மனிதர்களை என்னவென்பது?

சீதா/ராமன்-சீதா பழம் - பெயரளவில் நம் நாட்டு இதிகாசங்களின் தாக்கம் இருந்தாலும் இதுவும் வெறும் 500 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் இருந்து இறக்குமதியானதே!

கொய்யாப் பழம் - நம் ஊர்களில் பாட்டிகள் கூடை தூக்கி விற்பார்களே! அதேதான். அதுவும் அமெரிக்க இறக்குமதியே!

மக்காச் சோளம் - இரும்புச் சோளம் மற்றும் இதர சோளங்கள் ஏற்கனவே இருந்தாலும், மக்காச் சோளம் புதுவரவே! இதில் நாட்டு மக்காச் சோளம், அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் என்று நாம் வகை பிரித்தாலும் இரண்டுமே அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டவையே!

மரவள்ளிக் கிழங்கு - கிராமிய உணவாகப் பார்க்கப்படும் இதுவும் சில நூற்றாண்டுகளாக இங்கு வந்தேறிய பயிர்!

பப்பாளி - மெக்சிக்கோ நாட்டைத் தாயமாகக் கொண்ட மரம். இந்த மரத்தின் இலைச்சாறு டெங்குவைக் குணப்படுத்தும் என்று அரசாங்கமே விளம்பரம் போடுகிறது. ஆனால் இதன் தாயகமான மெக்சிக்கோவிலோ டெங்குவிற்கு தடுப்பூசி போடுகிறார்கள்!  இதைச் சிலர் சித்த மருத்துவம் என்றுகூடச் சொல்கிறார்கள். எந்தச் சித்தர் எந்த நூலில் பப்பாளி பற்றிக் குறிப்பெழுதியுள்ளார்? சுட்டிக்காட்டினால் நன்றாக இருக்கும்.

நிலக் கடலை - கடலை போடுவது முதல் "பாரம்பரிய மரச்செக்கு கடலெண்ணெய்" வரை கடலை நம் உணவிலும் வாழ்விலும் கலந்த ஒன்று. ஆனால் ஒரு 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் முன்னோர்கள் இதைக் கண்ணால்கூடப் பார்த்ததில்லை! கடலை மிட்டாய், கடலை எண்ணெய் பலகாரம் இதெல்லாம் நம் பாரம்பரியம் என்று நம்புபவர்கள் பலர். உண்மையில் இது சில நூற்றாண்டுகளுக்கு முன் வெள்ளையர்களால் கொண்டுவரப்பட்ட பயிரே!

அன்னாசிப் பழம் - எனக்கு மிகவும் பிடித்த பழம். தனியாக ஒரு முழு பழத்தைக் கூட சாப்பிட்ட நாட்கள் உண்டு! பிரேசில் நாட்டைத் தாயகமாக் கொண்டது இப்பழம்.

உருளைக்கிழங்கு - மற்றுமொரு "பாரம்பரியம்". பூரி கிழங்கு முதல் ஆலு பரோட்டா வரை! வட நாட்டின் உயிர் மூச்சான இந்த "ஆலு" அமெரிக்காவில் இருந்து வந்த "விதேசி" பயிர். அமெரிக்க விதேசி பயிரான உருளைக்கிழங்கைத் தடை செய்துவிட்டால் வடாஇந்தியர்கள் பாடு திண்டாட்டம்தான்!

பூசணி - பரங்கிக்காய் (வெள்ளைப் பூசணி ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது!)

சப்போட்டா - "சிக்கு" என்று வடஇந்தியர்களால் (வடஇந்தியத் தாக்கம் உள்ள தமிழர்களினாலும்) அறியப்படும் இப்பழம் மெக்சிகோ இறக்குமதி.

சூரியகாந்தி - எண்ணெய் வித்தாகப் பயன்படும் இப்பயிர் வடஅமெரிக்க கண்டத்தில் இருந்து வந்தது.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு - பெயரைக்கேட்டால் தூய தமிழாகத்தான் உள்ளது... ஆனால் சொந்த ஊர் தென்-அமெரிக்கா.

புகையிலை - புகையிலைப் பாக்குகளைக் குதப்பி, அங்கங்கு துப்பி வைப்பது வடஇந்தியர்கள் நடமாடும் பகுதி என்பதன் அடையாளம் என்று சொல்லும் அளவுக்கு நம் "கலாச்சாரத்தில்" கலந்தது இந்தப் புகையிலை. வெற்றிலையோடு புகையிலை போடும் பழக்கம் தமிழகத்திலும் இருந்தது (இன்னும் சிலரிடம் இருக்கிறது). எல்லாவற்றிற்கும் மேல், சில தெய்வங்களுக்கு சுருட்டு படைத்து வழிபாடும் வழக்கம் உள்ளது. இந்த எல்லா "பாரம்பரியங்களும்" வெள்ளைக்காரன் கொண்டுவந்த உயிர்கொல்லிப் புகையிலைமீது கட்டப்பட்டுள்ளது!

தக்காளி - கிலோ 120 ரூபாய் விற்றாலும் தக்காளி இல்லாமல் சமையல் செய்ய முடியாமல் வங்கியில் கடன் வாங்கியாவது தக்காளி வாங்குகிறோம் அல்லவா? அந்தத் தக்காளியும் வெள்ளைக்காரன் கொண்டுவந்ததுதான். ரசம், சாம்பார், குழம்பு என்று நீக்கமற நம் உணவில் நிறைந்துள்ள தக்காளி நம் முன்னோர்களுக்கு ஐரோப்பியர்கள் அறிமுகப்படுத்தியபோது புதுமையாகவே இருந்திருக்கும்.

முன்பே கூறியது போல நாம் இயல்பாக நம் மரபு, பண்பாடு, பாரம்பரியம் என்றெல்லாம் நம்பும் பலவும் நம் முன்னோர்களுக்கு புதியவையாகவும் அந்நியமாகவும் இருந்தவையே! அவர்கள் நம்மைப்போல முன்னோர் பெருமை பேசி இந்தப் புதுமைகளை ஏற்காமல் விட்டிருந்தால் வத்தல் குழம்பும் வஞ்சிர மீன் வறுவலும் நம் உணவுகளாக இருந்திருக்காது! புதுமைகள் எல்லாமே தீமை என்று எண்ணி அஞ்சாமல் அவற்றில் நல்லவற்றை எடுத்து தீயவற்றைத் தவிர்ப்போம்!

Wednesday, August 2, 2017

கொஞ்சம் படிங்க பாஸ்! - பகுதி 8

நூலின் தலைப்பு: தி கிரேட்டெஸ்ட் ஷோ ஆன் எர்த் (The Greatest Show on Earth)
ஆசிரியர்: ரிச்சர்டு டாவ்கின்ஸ்
பக்கங்கள்: ~500
வெளியீடு: டிரான்ஸ்வேர்ல்டு வெளியீடு
மொழி: ஆங்கிலம்
விலை: ~ ரூ. 400/-
வயது: 15+
பொருள்: அறிவியல், உயிரியல், பரிணாமம்
"இவ்வுலக மேடையில் நாம் அனைவரும் நடிகர்கள்!" என்ற ஷேக்ஸ்பியர் கூற்றுப்படி, உலகிலேயே பல கோடி ஆண்டுகளாகத் தொடந்து நடந்துவரும் நாடகம் எது? அனைத்து உயிர்களாலும் கூட்டாக நடத்தப் படும் பரிணாமமே அது! அத்தகைய பரிணாமத்தை பாடத்தில் படிக்கும்போது நாம் புரிந்துகொள்வது கொஞ்சமே. அந்தப் புரிதலும் பெரும்பாலான நேரங்களில் தவறாகவே உள்ளது. ஆனால் மத வியாபாரமும் போலி அறிவியலும் மலிந்துள்ள இன்றைய சூழலில் பரிணாமக் கோட்பாடைச் சரியாகப் புரிந்துகொள்வது இன்றியமையாதது. இந்நூல் அந்த முக்கியமான பணியைச் செய்கிறது.

சுமார் 500 பக்கங்கள் நீளும் இந்நூல் சற்றுப் பெரியதுதான். மேலும் குறைந்தது 15 வயதாவது ஆனா அறிவியல் ஆர்வமுள்ளவர்கள் படிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. அறிவியல் ஆர்வம் மற்றவர்களும், சிறுவயதினரும், பிறர் உதவியுடன் படிக்கலாம் அல்லது இந்நூலைப் படித்தவர்கள் அவர்களுக்கு விளக்கிச் சொல்லலாம். எளிய சோதனை விளக்கங்கள், எடுத்துக்காட்டுகள் மற்றும் விரித்தல் மூலம் டாவ்கின்ஸ் அவர்கள் பரிணாமக் கோட்ப்பாட்டை முடிந்தவரை எளிமையாக நம் முன் வைக்கிறார். மேலும் இதனால் பரிணாமம் குறித்த சரியான புரிதல் நமக்கு கிடைக்கிறது (இது தான் மிக முக்கியமான சிறப்பம்சம்!).

English Summary:  

Book Title: The Greatest Show on Earth
Author: Richard Dawkins
Pages: ~500
Publisher: Transworld Publishers
Language: English
Price: ~ Rs. 400/-
Age Group: 15+ 
Category: Science, Biology, Evolution

Wednesday, July 5, 2017

தமிழை வளர்க்க என்ன செய்யலாம்? - 5 எளிய செயல்கள்

1. தமிழில் பேசுங்கள்/எழுதுங்கள்!

ஒரு மொழியின் உயிர்ப்பே அதை எவ்வளவு பேர் எவ்வளவு அதிகமாகப் பேசுகிறார்கள், எழுதுகிறாரகள் மற்றும் இதர இடங்களில் பயன்படுத்துகிறார்கள் என்பதைப்பொறுத்தது. நீங்கள் வீட்டிலும், பொதுவெளியிலும் தமிழிலேயே பேசுங்கள். நாளுக்கு நாள் உங்கள் பேச்சில் உள்ள பிறமொழிச் சொற்களைக் குறைக்க முயலுங்கள். "உதாரணமாக" --> "எடுத்துக்காட்டாக", "சேஞ்ச் இருக்கா?" --> "சில்லறை இருக்கா?", "மொசாம்பி ஜூஸ்" --> "சாத்துக்குடிச் சாறு". இப்படி கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழை பழக்கப்படுத்துங்கள். சில ஆண்டுகளுக்கு முன், கணினி, இணையம் போன்ற சொற்கள் சிலர் மட்டுமே அறிந்ததாக இருந்தன. இன்றோ பெரும்பான்மை தமிழர்களுக்கு இச்சொற்கள் பரிட்சயமானவை நன்கு தெரிந்தவை.

வங்கி சென்றால் தமிழில் படிவங்களைக் கேளுங்கள். வங்கி, அலைப்பேசி நிறுவனங்கள், விளம்பர நிறுவனங்கள் போன்றவற்றில் இருந்து வரும் தொலைப்பேசி அழைப்புகளுக்குத் தமிழிலேயே பதிலளியுங்கள். அவர்கள் வேறு மொழி பேசினால், தமிழ் தெரிந்த ஒருவரைப் பேசச் சொல்லுமாறு கூறும் உரிமை நமக்குண்டு! இப்படி அதிக எண்ணிக்கையில் தமிழில் சேவைகள் பெறப்படும்போது, அவற்றின் அவசியம் அந்நிறுவனங்களுக்கும் புரியும். தமிழ் நூல்கள், செய்தித் தாள்கள், வலைத்தளங்கள் போன்றவற்றை அதிகம் படியுங்கள். தமிழுக்குச் சந்தை மதிப்பு அதிகரித்தால், தானாகப் பல நிறுவனங்கள் தமிழில் தங்கள் நூல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் வலைத்தளங்களை மொழிபெயர்த்து வெளியிடுவர்.

2. தமிழ்வழிக் கல்வி 

இது இன்றைய சூழலில் சற்று சிக்கலான செயலே! தமிழில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த முன்னேற்றங்கள் இன்னும் சற்று பின்தங்கி உள்ளது மறுக்கமுடியாதது. ஆகவே ஆங்கிலம் நமக்கு இந்த இடைவெளியை நிரப்ப அவசியமாகிறது. அதனால் நாம் கல்வியில் ஆங்கிலத்தை சேர்த்துக்கொள்வது தவறில்லை. தமிழ் என்று எல்லாத்துறைகளிலும் தன்னிறைவு அடைகிறதோ, அன்று ஆங்கிலத்தை நாம் அடியோடு நிறுத்திவிடலாம். எப்படி நீச்சல் கற்கச் சுரைக்குடுக்கை உதவுகிறதோ, அதுபோல! அதுவரை ஆங்கிலத்தை அளவோடு கற்போம். ஆங்கிலத்தை இப்படித் தேவைக்குக் கற்றாலும், அதை ஒரு பெருமையாக எண்ணாமல் இருப்பது அவசியம்.


குழந்தைகளுக்கு நாம் ஏன் ஆங்கிலம் கற்கிறோம் என்று சொல்லுங்கள். ஆங்கிலம், அறிவின் அடையாளமோ, நாகரீகத்தின் குறியீடோ இல்லை. மாறாக அது நாம் இழந்த அறிவியல் மற்றும் சமூக முன்னேற்றங்களை அடைய உதவும் பாலம் மட்டுமே என்று விளங்க வையுங்கள். இவ்வாறு நாம் தமிழில் மட்டும் எல்லாப் பாடங்களையும் கற்கும் நாளுக்கு அவர்களை ஆயத்தப் படுத்துங்கள். இன்னும் சில தலைமுறைகளில் அது நடக்கும். ஆங்கிலேயர் நம்மை சில காலம் ஆண்டதாலும், ஆங்கிலம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெற்ற மொழி என்பதாலும் மட்டுமே ஆங்கிலம் தேவையாகிறது. இந்தி, ப்ரெஞ்சு, ஜெர்மன், சமஸ்க்ருதம் போன்ற மொழிகள் மேற்கூறிய வகையில் நமக்கு உதவாதவைகள்.

3. சமூக வலைத்தளங்களில் தமிழ்

இன்று சமூக வலைத்தங்கள் அனைவரையும் தங்களின் வலையில் சிக்கவைத்துள்ளன. இதையே ஒரு வாய்ப்பாக நாம் மாற்றிக்கொள்ளலாம். நீங்கள் கைப்பேசி வாங்கும்போதே அதில் தமிழ் உள்ளீடு வசதி உள்ளதா என்று பார்த்து வாங்குங்கள். அல்லது செயலிகள் மூலம் உங்கள் கைப்பேசியில் தமிழ் உள்ளீடு செய்ய முடியுமா என்று பாருங்கள். கூகிள் போன்ற தேடுபொறிகளிலும், முகநூல், ட்விட்டர் போன்ற தளங்களிலும் தமிழிலேயே உள்ளீடு செய்யுங்கள். வலைப்பூக்கள், யூட்யூப் போன்ற காணொளித் தளங்கள், மற்றும் இதர வலைத்தளங்களிலும் கருத்துக்களைப் பகிரும்போது தமிழில் பகிருங்கள்.

தமிழ் உள்ளீடு வசதி உள்ளதா என்று பாருங்கள்

இதன் மூலம் தமிழின் இணைய ஊடுருவல் அதிகரித்து பன்னாட்டு நிறுவனங்களும் சந்தையைப் பிடிக்க தமிழ் மொழியில் சேவைகளை மேம்படுத்த முற்பட வாய்ப்புள்ளது. மேலும் கைய்ப்பேசி நிறுவனங்களும் தமிழ் மொழி உள்ளீடு உள்ள கருவிகளை அதிகம் தயாரிக்க இது ஒரு உந்துதலாக இருக்கும். கணினியில் தமிழ் தட்டச்சு செய்வது சற்று கடினமே. ஆனால், கைப்பேசிகள் இன்று இதை எளிதாக்கியுள்ளன. இதை நாம் முழுமையாகப் பயன்படுத்தி இணையத்தில் தமிழை அரியணை ஏற்றுவோம்!

4. மொழிபெயருங்கள்

விக்கிபீடியா, ப்ராஜெக்ட் குட்டென்பெர்க் போன்ற கட்டற்ற கலைக்களஞ்சியங்கள் மற்றும் மின்-நூலகங்களைத் தமிழில் மொழிபெயர்க்க உதவுங்கள். மேலும் கட்டற்ற மென்பொருள்கள் மற்றும் அவற்றின் உதவிக் கோப்புகளைத் தமிழில் மொழிபெயர்க்க உதவுங்கள். இதன் மூலம் தமிழ் மட்டுமே தெரிந்தவர்களும் கணினி மற்றும் இணையம் போன்ற புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த நீங்கள் உதவலாம்.


கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறைக் காலச் செயல்பாடாக இதுபோன்ற மொழிபெயப்புப் பணிகளை கல்லூரிகள் வழங்கலாம். மருத்துவ மாணவர்கள் ஒவ்வொருவரும் ஆண்டு விடுமுறையில் விக்கிப்பீடியாவில் உள்ள மருத்துவம் சார்ந்த கட்டுரைகளில் ஒன்றையோ இரண்டையோ மொழிபெயர்த்தால் சில ஆண்டுகளில், எந்த அளவுக்கு நாம் மருத்துவ அறிவைத் தமிழுக்கு இறக்குமதி செய்திருப்போம் என்று எண்ணிப்பாருங்கள். இப்படியே  வரலாறு, தொல்லியல், உயிரியல், வேதியல், கணிதம், பொறியியல் என்று பலவேறு துறை மாணவர்களும் ஆளுக்கு ஒன்றாகத் தங்கள் தங்கள் துறை சார்ந்த கட்டுரைகளை மொழிபெயர்த்தால் அதன் தாக்கம் என்னவாக இருக்கும்? சிந்தியுங்கள்!

5. புதிய கலைச்சொற்களை கற்றல்/உருவாக்குதல் 

எல்லாவற்றிற்கும் காரணப்பெயர்களா?
(நகைப்புக்காக மாற்றப்பட்ட படம்!)
இது இன்றியமையாத ஒன்று. ஒரு உயிருள்ள மொழி, வளர்ந்துகொண்டே இருக்கும். அகவே, தமிழ் மொழி வளர்வதற்கு அதற்க்குப் புதிய சொற்கள் தேவை. கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சிகள் ஏராளம். அவற்றைக் குறிக்கத் தமிழில் சொற்கள் உருவாக வேண்டும். எல்லாவற்றையும் காரணப்பெயர்களாக மட்டும் வைப்பது சற்றே கடினமான ஒன்று. மிக நீண்ட மற்றும் நகைப்புக்குரிய வகையில் காரணப்பெயர்களை வைப்பதைவிட, சற்று சிறிய, மனதில் நிற்கக்கூடிய எளிய சொற்களை உருவாக்குவதும் இன்றைய தேவை! இச்சொற்களை உருவாக்குவது மொழியியல் வல்லுனர்களின் வேலை! இவ்வாறு உருவான சொற்களை பயன்பாட்டிற்குக் கொண்டுவருவது, அனைவரது கடமை! ஆகவே உங்கள் ஆர்வத்திற்கேற்ப இவ்வகையிலும் நீங்கள் உதவலாம்!

Thursday, June 29, 2017

தேசியத் தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட கல்வித் திட்டம்

அறிமுகம்:

NPTEL முத்திரை
தேசியத் தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட கல்வித் திட்டம் (The National Programme on Technology Enhanced Learning - NPTEL) இந்திய மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் ஒரு திட்டமாகும். இத்திட்டம் இணையத்தின் மூலம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மேலாண்மை மற்றும் வாழ்வியல் போன்ற பல்வேறு துறைகள் சார்ந்த பாடங்களை காணொளி மற்றும் மின்-கல்வி வழியாக வழங்கிவருகிறது. இது ஏழு இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் (IITs) மற்றும் இந்திய அறிவியல்க் கழகங்களால் (IIScs) முன்னெடுக்கப்படுகிறது. மேலும் பல முன்னணி கல்வி நிறுவனங்கள் இதில் பங்குபெறுகின்றன. இதில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் (AICTE) கல்வித்திட்டம் மற்றும் பல முன்னணி பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்கள்  பின்பற்றப்படுகின்றன.

நோக்கம்:

இத்திட்டத்தின் முதன்மை நோக்கம், பொறியியல் கற்கும் மாணாக்கர்களுக்கு எளிய பாடங்கள் மற்றும் காணொளிகள் மூலம் உதவுவதே ஆகும். பொதுவில், இந்திய இளைஞர்களிடம் அறிவியல் மற்றும் பொறியியல் சார்ந்த அறிவுத்திறனைப் பெருக்குவதன் மூலம் உலக அளவில் அவர்களின் தரத்தை உயர்த்தவும் இத்திட்டம் முனைகிறது.

வரலாறு:

பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் 1999ஆம் ஆண்டு "தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட கல்வி" குறித்த பட்டறை (Workshop) ஒன்று அமெரிக்காவின் கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகத்தோடு (Carnegie Mellon University) இணைந்து நடத்தப்பட்டது. அதன் முடிவில், இந்தியாவிலும் இதுபோன்ற ஒரு தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட கல்விக்கான திட்டத்தின் அவசியம் பரிசீலிக்கப்பட்டு, அதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் தொடங்கப்பட்டன. ஜூன், 2017 நிலவரப்படி, இதில் 1200க்கும் மேற்பட்ட காணொளிகள் மின்-கல்விப் பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

பாடங்கள் பற்றி:

ஒவ்வொரு பாடத்திட்டத்தில் தோராயமாக 40 ஒரு மணி நேரக் காணொளிகள் உள்ளன. இரு மற்றும் முப்பரிமாண அனிமேஷன்கள், பவர் பாய்ண்டு ஸ்லைடுகள், கரும்பலகை மற்றும் இதர கற்பிக்கும் முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

துறைகள்:

வான்வெளிப் பொறியியல், விவசாயம், கட்டடக்கலை, வளிமண்டல அறிவியல், அடிப்படைப் பாடங்கள், கட்டுமானப் பொறியியல், கணினி, மின்னியல், மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பவியல், பொறியியல் வடிவமைத்தல், சுற்றுச்சூழல், பொது, வாழ்வியல் மற்றும் சமூகம், உயிர்த்தொழில்நுட்பம், மேலாண்மை, வேதிப் பொறியியல், வேதியியல் மற்றும் உயிர்-வேதியல், கணிதம், இயந்திரப் பொறியியல், உலோகவியல், சுரங்கப் பொறியியல், கடல் பொறியியல், இயற்பியல் மற்றும் துணிப் பொறியியல் போன்ற பல்வேறு துறைகள் இதில் அடங்கும்.

எழுத்து வடிவில்:

இத்திட்டத்தில் உள்ள எல்லாக் காணொளிகளின் பேச்சுக்களும் எழுத்துவடிவிலும் கிடைக்கிறது. பி.டி.எப்., காணொளி அடியெழுத்துக்கள் மற்றும் காணொளியாற்ற வெறும் பேச்சுக்களாக எம்.பி.3 கோப்புகளாகவும் பதிவிறக்கம் செய்யலாம். இவை அனைத்தும் NPTEL இணையத்தளத்திலேயே உள்ளன. வரும் நாட்களில், காணொளிகளுக்குள் தேடுவது மற்றும் வட்டார மொழிகளில் மொழிபெயர்ப்பு போன்ற வசதிகள் செய்யப்படவுள்ளன.

குறிப்பிடத்தக்க வலைத்தளங்கள்:

1. http://nptel.ac.in  - அதிகாரப்பூர்வ இணையதளம்
2. http://www.youtube.com/iit
3. இணைய இணைப்பு இல்லாதவர்கள் NPTEL.BODHBRIDGE@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புகொண்டு இப்படங்களை குறுந்தகடுகளாகவும் குறைந்த கட்டணத்தில் பெறலாம்.

Tuesday, June 27, 2017

குறுக்கும் நெடுக்கும்

மின்தூக்கிகள் (lift) நம் வாழ்வில் ஆடம்பரங்களில் ஒன்றாக இருந்து தற்போது அத்தியாவசியமாக மாறிக்கொண்டுள்ளன. நகரங்களின் நெரிசல்களைச் சமாளிக்க அடுக்கடுக்காக மாடிகளைக் கட்டிக் கொண்டே போகிறோம். வானளாவிகளின் (skyscrapers) எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது. ஓரிரண்டு மாடிகள் என்றல் படிகளில் ஏறலாம். பத்துப் பதினைந்து மாடிகள் என்றல்? மேலும் வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள், கருவுற்ற பெண்கள் என்று படிகளில் எற முடியாதவர்களும் உண்டல்லவா? ஆகவே மின்தூக்கிகள் நமக்கு இன்றியமையாத ஒன்றாகின்றன.


நான் சிலகாலம் முன் ஒரு பெரிய தொழில்நுட்பப் பூங்காவிற்குச் சென்றேன். அங்கு மின்தூக்கிகள் இருந்தன. ஆனால் மின்தூக்கி நம்மை இறங்கிவிடும் இடத்தில் இருந்து நாம் வேண்டிய இடத்திற்கு வெகுதூரம் நடக்க வேண்டியிருந்தது. காரணம், உயரத்தில் மட்டுமல்ல, அகலத்திலும் அந்தக் கட்டடம் பெரிது. இதுபோன்ற சூழல்களில் மின்தூக்கி மட்டும் போதாதாதல்லவா? மேல்/கீழ் நோக்கி மட்டும் செல்லும் மின்தூக்கியாக இல்லாமல் பக்கவாட்டிலும் செல்லும் "மின்நகர்த்தி"யாக இருந்தால் எப்படி இருக்கும்? ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தைசன்க்ரப் (ThyssenKrupp) என்ற நிறுவனம் அப்படி ஒரு மின்நகர்த்தியை வடிவமைத்துள்ளது. அதற்க்கு "மல்டி" (The Multi) என்று பெயரும் சூட்டப்பட்டுள்ளது.


பொதுவாக மின்தூக்கிகள் கம்பியின் (cable) மூலமே மேலும் கீழும் இழுக்கப் படும். ஆனால் "மல்டி"யில் எந்தக் கம்பியும் கிடையாது! பின்பு எப்படி அது நகரும் என்று யோசிக்கிறீர்களா? ஜப்பானில் ஓடும் காந்தமிதவுந்தில் (Maglev Train) பயன்படுத்தப்படும் காந்தமிதவுத் (Magnetic Levitation) தொழில்நுட்பம் இதிலும் பயன்படுத்தப்படுகிறது. காந்தப்புலத்தின் உந்தலால் மின்நகர்த்தி அந்தரத்தில் மிதக்கிறது. பின்பு மின்-காந்தப்புலத்தில் செய்யப்படும் மாற்றத்தால் அது குறிப்பிட்ட திசை நோக்கி நகர்கிறது. இதனால் கம்பிகள் பளு தாங்காமல் அறுந்து போவது, உராய்வு மற்றும் தேய்மானம் போன்ற தொல்லைகள் தவிர்க்கப்படுகின்றன. மேலும் மின்தூக்கிகள் போல் மேலும்/கீழுமாக மட்டும் அல்லாமல் இவ்வகை காந்தமிதவு மின்நகர்த்திகள் பக்கவாட்டிலும், குறுக்குவாட்டிலும்கூடப் பயணிக்கக்கூடியவை. இதனால் நேரம் மிச்சமாவதோடு முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் இன்னல்களும் பெருமளவு குறையும்.

இதுகுறித்து தைசன்க்ரப்பின் முதன்மை செயல் அலுவலர் (CEO) ஆன்ட்ரியாஸ் ஸ்கைரென்பெக் (Andreas Schierenbeck) கூறுகையில் "500 டன் எடைகொண்ட தொடர்வண்டியை 500 மணிக்கு கி.மீ. வேகத்தில் இயக்க முடியும் என்றால், 500 அல்லது 1000 கி.கி. எடைகொண்ட பெட்டியை நொடிக்கு 5 மீட்டர் நகர்த்த முடியாத என்ன!" என்றார். இவ்வகை காந்தமிதவு மின்நகர்த்திகள் தற்போது பயன்பாட்டில் உள்ள மின்தூக்கிகள் போல 3 முதல் 5 மடங்கு வரை விலை கொண்டதாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. தற்போதுள்ள மின்தூக்கிகள் கம்பிகளின் பளுதாங்கும் திறன் காரணமாக குறிப்பிட்ட உயரத்திற்குமேல் பயன்படுத்த முடியாது. ஆனால், காந்தமிதவு மின்நகர்த்திகள் அதிஉயரக் கட்டடங்களில்கூடப் பயன்படுத்தலாம்.

Thursday, June 22, 2017

என் கோள்! என் முடிவு!

எதோ சீயக்காய் விளம்பரம் என்று உங்கள் உலாவியை மூடிவிடாதீர்கள்! சில நாட்களுக்கு முன், "நானே கப்பல்! நானே மாலுமி!" என்ற பதிவில் தானியங்கிக் கப்பல்கள் குறித்து நடந்துவரும் முன்னேற்றங்கள் பற்றிப் பார்த்தோம். தற்போது வந்துள்ள செய்திகளின் படி, நாசா (NASA) அனுப்பிய க்யூரியாசிட்டி ஆளில்லா ஆய்வுக்கலம் (Curiosity Rover) தனாகவே முடுவுகள் எடுத்து ஆய்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. 2012ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டின் நாசா அனுப்பிய க்யூரியாசிட்டி ஆய்வுக்கலம் செவ்வாய் கோளில் உயிர்கள் வாழ்ந்தனவா, வாழ்ந்து கொண்டிருக்கின்றனவா அல்லது வாழும் வாய்ப்பு உள்ளதா போன்ற கேள்விகளுக்கு விடை காணும் பொருட்டு பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.

செவ்வாயில் க்யூரியாசிட்டி எடுத்துக்கொண்ட செல்ஃபீ !
நன்றி: NASA/JPL-Caltech/MSSS

இதுவரை புவியில் இருந்து கட்டுப்படுத்தப்பட்டு வந்த அக்கலம், தற்போது தன்னிச்சையாகச் (Autonomous) செயல்படத் தொடங்கியுள்ளது. ஒரு இயந்திரக்கலத்தின் ஒவ்வொரு செயல்பாட்டையும் வேறு ஒரு கோளில் இருந்துகொண்டு கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். இங்கிருந்து அனுப்பப்படும் ஆணைகள் செவ்வாயில் உள்ள கலத்தை அடைய பல மணிநேரங்கள் ஆகலாம்! தூரம், இடையில் உள்ள தகவல்த்தொடர்பு செயற்கைக்கோள்களின் நிலை (position) போன்றவற்றால் இந்த வகையில் கலத்தைக் கட்டுப்படுத்துவது மிகவும் நேரம் மற்றும் உழைப்பை வீணாக்கும் ஒன்றாக இருந்துவந்தது.

அதனால் ஏற்கனவே திட்டமிட்ட படி செயற்கை அறிவுத்திறன் (Artificial Intelligence) மூலம் இந்தக்காலம் இயங்கத்தொடங்கியுள்ளது. எதேச்சையாக வெவ்வேறு இடங்களை லேசர் ஒளி கொண்டு உணர்ந்து அதில் செயற்கை அறிவுத்திறன் மூலம் ஆய்வுக்குச் சிறந்த இடம் எது என்று அடையாளம் கண்டு அந்த இடத்தை ஆராய்கிறது. இந்த செயற்கை அறிவுத்திறனுக்கு "அதிக அறிவியல் சேகரிப்புக்கான தன்னிச்சையான தேடல்" (Autonomous Exploration for Gathering Increased Science -AEGIS) என்று பெயரிட்டுள்ளனர். இந்த "ஏஜிஸ்" கருவி, 94% நேரங்களில் சரியான இலக்குகளை ஆராய்ந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது!

Wednesday, June 21, 2017

ஃபயர் ஃபாக்ஸ் ஃபோகஸ் - இணையத்தில் உலாவ ஒரு நம்பகமான தோழன்

ஃபயர் ஃபாக்ஸ் ஃபோகஸ் (Fire Fox Focus) ஒரு புதிய ஆண்டிராய்டு / ஐ-ஓ.எஸ் (Android / iOS) செயலி (App) ஆகும். மிகவும் அறியப்பட்ட உலாவிகளில் (Browsers) ஒன்றான ஃபயர் ஃபாக்ஸின் மற்றுமொரு பரிமாணமே இந்தப் புதிய உலாவி செயலி. இந்த உலாவி விளம்பரங்கள் மற்றும் உங்கள் பயன்பாட்டைக் கண்காணிக்கும் டிராக்கர்கள் (Trackers) ஆகியவற்றை தானாகவே தடைசெய்துவிடுகிறது. இந்தப் புதிய செயலியை ஆண்டிராய்டு ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்தச் செயலி வெறும் 4 எம்.பி அளவு மட்டுமே கொண்டது. எனவே உங்கள் கைப்பேசியின் வேகத்தை இது குறைக்காது.


சில வலைத்தளங்கள் உங்கள் கைப்பேசியில் உள்ள ஜீ.பீ.எஸ். மூலம் உங்கள் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து, அதற்கேற்றார் போல விளம்பரங்களை காட்டுகின்றன. சில தளங்கள், நீங்கள் படிக்கும் பக்கங்கள், மற்றும் தேடும் சொற்களைக் கொண்டு உங்களை பற்றிய ஒரு ப்ரோபைலை உருவாக்கி வைத்துக்கொண்டு நீங்கள் யார், என்ன செய்கிறீர்கள், எங்கு உள்ளீர்கள், என்ன விருப்பு/வெறுப்பு உள்ளவர் என்று ஒரு அனுமானத்திற்கு வருகின்றன. இதனால் என்ன தப்பு என்கிறீர்களா? அவர்கள் இத்தனை மெனக்கெட்டு இதைச் செய்ய என்ன காரணம்? இந்தத் தகவல்களைக்கொண்டு குறிவைத்து விளம்பரத்தாக்குதல் நடத்தி (Targeted Ad Campaigns), உங்களைப் பொருட்களை வாங்க வைப்பதே நோக்கம்.

ஆன்லைன் வர்த்தகம், நமக்கு வேண்டுமா வேண்டாமா என்ற முன்யோசனையின்றி, நம்மைப் பல பொருள்களை வாங்க வைக்கும் ஒரு சிலந்திவலை. கடன் அட்டைகளும், ஆன்லைன் வர்த்தகமும் நம்மை தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கும் அடிமைகளாக்கியுள்ளன. முதலாளித்துவத்தின் இன்றியமையாத அம்சங்களான அதீத உற்பத்தி (over production), நுகர்வுக்கலாச்சாரம் (consumerism) மற்றும் கடன் மூலம் அடிமைப்படுத்துவது (debt slavery) எல்லாம் உங்கள் கைப்பேசிக்குள்ளும் ஒளிந்திருக்கின்றன. இந்நிலையில், ஃபயர் ஃபாக்ஸ் ஃபோகஸ் உங்களுக்கு ஓரளவேனும் இந்த துல்லியத் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கிறது.

மேலும் கூடுதல் பயன்களாக, இந்தச் செயலி மூலம் நீங்கள் இணையத்தில் உலாவும்போது, உங்கள் கைபேசியில் உள்ள டேட்டா குறைவாகப் பயன்படுகிறது. இதனால் பக்கங்கள் சீக்கிரத்தில் தெரிகின்றன. மேலும் குறைவான மெமரி, டேட்டா மற்றும் ப்ராசசர் பயன்பாட்டால் உங்கள் மின்கலன்(பேட்டரி) பயன்பாடும் வெகுவாகக் குறைகிறது. கூகிளின் கோரப்பிடியில் சிக்கி இருக்கும் ஆண்டிராய்டு இயங்குதளமும், அதனோடு வரும் உலாவியும் (ஆப்பிள்/ஐ-ஓ.எஸ் குறித்து சொல்லவே வேண்டாம்!) ஏற்படுத்திடும் அச்சுறுத்தல்களில் இருந்து நாம் சற்றேனும் தப்ப இந்த புதிய உலாவி நமக்கு உதவும் என்று நம்புவோமாக!

Monday, June 12, 2017

நானே கப்பல்! நானே மாலுமி!

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சில கப்பல் நிறுவனங்கள் தானியங்கிக் கப்பல்களைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. 2025ஆம் ஆண்டையொட்டி இவ்வகைக் கப்பல்கள் பயன்பாட்டிற்கு வரலாம் என்று நம்பப்படுகிறது. மிட்ஸு ஓ.எஸ்.கே. லைன்ஸ் (Mitsu OSK Lines) மற்றும் நிப்பான் யூஸென் (Nippon Yusen) ஆகிய நிறுவனங்கள் இதில் முன்னணியில் உள்ளன.
செயற்கை அறிவுத்திறன் (Artificial Intelligence - AI) மூலம் கப்பல் செல்ல மிகவும் பாதுகாப்பான, குறைந்த தூரம், நேரம் மற்றும் எரிபொருள் செலவு ஆகும் வழித்தடத்தை தானே கண்டறிந்து பயணிக்கும் வகையில் இக்கப்பல்கள் வடிவமைக்கப் படவுள்ளன. முதல் கட்டமாக ஒரு சிறு ஊழியர்குழு கப்பலுடன் பயணிக்கும். பின்பு நாளாடைவில் முற்றிலும் தன்னிச்சையாக இயங்கும் கப்பல்கள் பயன்பாட்டிற்கு வந்து விடும் என்று துறைசார் நிபுணர்கள் கூறுகின்றனர்.

2020ஆம் ஆண்டுக்குள்ளாகவே தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் (remote controlled) கப்பல்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்று ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கப்பல்த் துறை ஆய்வாளர் ஆஸ்கர் லெவாண்டர் தெரிவித்துள்ளார். என்னதான் தானாகவே இயங்கும் திறன் இருந்தாலும் சில இன்றியமையாத சூழ்நிலைகளில் மனித மாலுமி ஒருவரின் முடிவுகள் தேவைப்படும். அந்நேரங்களில், கரையில் இருந்தே கண்கணிக்கும் ஒரு மாலுமி, வேண்டிய கட்டளைகளை கப்பலுக்கு அனுப்ப முடியும்.

இன்னும் எதிர்காலத்தில் என்னென்ன விந்தைகள் நமக்காகக் காத்திருக்கின்றனவோ!

Friday, June 9, 2017

வீட்டு விலங்குகளின் தோற்றம்

நாம் நினைப்பது போல எல்லா விலங்குகளும் கடவுளால் தனித்தனியாகப் படைக்கப்பட்டவை அல்ல. இன்று நாம் வீட்டு விலங்குகளாக வளர்க்கும் பல விலங்குகள் மனித வரலாற்றின் பிந்தைய காலத்தில் மனிதனால் உருவாக்கப்பட்டவையே! அதாவது பின்வரும் இரண்டில் எதோ ஒன்று.

1. மனிதன் தன்னுடைய தேவை கருதி ஒரு வகை விலங்கைப் பழக்கப்படுத்தி, தனக்கு வேண்டிய பண்புகள் உள்ள விலங்குகளை மட்டும் தேர்வு முறையில் இனப்பெருக்கம் செய்து (selective breeding) தற்போதுள்ள நிலைக்குக் கொண்டுவந்தது.

2. மனிதனின் உணவு மற்றும் இருப்பிடம் சார்ந்த பழக்கங்களால் மனிதனோடு ஒன்றிய வாழ்க்கை வாழ்ந்த மிருக இனங்கள் சில, காலப்போக்கில் இயற்கையாகவே வீட்டு விலங்குகளாகப் பரிணமித்தது (coevolution).

விலங்குகள் மட்டும் அல்ல, பூச்சிகள், தாவரங்கள் என்று பலவும் இவ்வாறு தெரிவு முறை இனப்பெருக்கம் மூலமோ, சார்புப் பரிணாமம் மூலமோ (coevolution) தற்கால நிலையை அடைந்துள்ளன. எடுத்துக்காட்டாக பேன்களை எடுத்துக்கொண்டால், மனிதன் ஆடை அணியும் பழக்கம் வரும் முன் வாழ்ந்த பேன் இனம், அவன் ஆடை அணிய ஆரம்பித்த பிறகு சார்புப் பரிணாம வளர்ச்சியால் வேறு வைகையாகப் பரிணமித்தது. அதுபோல, மனிதன் தன் விருப்பத்தின்படி தேர்வு செய்த பண்புகள் உள்ள செடிகளை பயிரிட்டு ஒரே வகையாக இருந்த காட்டு முட்டைகோஸ் செடியை, முட்டைகோஸ், காளிபிரளவர், நூல்கோல் போன்ற பல வகைத் தாவரங்களாக மாற்றினான். இப்படி நம் கண்முண்ணே இருக்கும் பலவும் நம்மை அறியாமலோ அல்லது நம் விருப்பத்தின் படியோ நம்மால் உருப்பெற்றவை என்றால் நம்ப முடிகிறதா?

சரி, இங்கே சில விலங்குகளை மட்டும் எப்போது, எங்கு, எதிலிருந்து வீட்டு விலங்குகளாக மனிதனால் மாற்றப்பட்டன என்று பார்ப்போம்.(இந்த அட்டவணை காலத்தால் முந்தையது தடங்கிப் பிந்தியது வரை தொகுக்கப்பட்டுள்ளது)

வ.எண் விலங்கு/பறவை மூதாதை காட்டு இனம் (wild ancestor) காலம் இடம்
1 நாய் ஓநாய் கி.மு. 13,000 ஐரோப்பா
2 வெள்ளாடு பாரசீக ஐபெக்ஸ் கி.மு.10,000 மேற்கு ஆசியா (துருக்கி, இரான்)
3 பன்றி காட்டுப் பன்றி கி.மு. 9,000 மேற்கு ஆசியா, சீனா
4 செம்மறி ஆடு காட்டுச் செம்மறி கி.மு. 8,500 துருக்கி
5 மாடு (திமில் இல்லாத இனம்) ஒளரக்ஸ் கி.மு. 8,000 இந்தியா, மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா
6 மாடு (திமில் உள்ள இனம்) இந்திய ஒளரக்ஸ் கி.மு. 8,000 இந்தியா
7 பூனை ஆபிரிக்கக் காட்டுப் பூனை கி.மு. 7,500 மேற்கு ஆசியா
8 கோழி காட்டுக்கோழி கி.மு. 6,000 இந்தியா, தென்கிழக்கு ஆசியா
9 கழுதை ஆபிரிக்கக் காட்டுக் கழுதை கி.மு. 5,000 எகிப்து
10 வாத்து காட்டு வாத்து கி.மு. 4,000 சீனா
11 எருமை காட்டெருமை கி.மு. 4,000 வடகிழக்கு இந்தியா, சீனா
12 ஒட்டகம் பாலை ஒட்டகம் கி.மு. 4,000 அரேபியா
13 குதிரை காட்டுக் குதிரை கி.மு. 3,500 மத்திய ஆசியா
14 புறா மாடப்புறா கி.மு. 3,500 மத்தியத் தரைக்கடல்ப் பகுதி
15 வான்கோழி காட்டு வான்கோழி கி.பி. 100 - 200 மெக்சிக்கோ, யூ.எஸ்.ஏ
16 தங்க மீன் பிரஷ்ஷியக் கெண்டை கி.பி. 300 - 400 சீனா
17 சண்டை மீன் (fighter fish) பெட்டா மீன் கி.பி. 1800 தாய்லாந்து
18 வளர்ப்பு நாரி (ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்டது) நாரி கி.பி. 1950 சோவியத் ஒன்றியம்

Friday, June 2, 2017

ஈசல் வறுவல்!

கேட்டாலே சிலருக்கு பிரட்டிக்கொண்டு வரலாம்... எப்படி சிலருக்குப் பன்றிக்கறி பற்றிய சிந்தனையே ஒவ்வாத ஒன்றோ, எப்படி சிலருக்குக் கருவாட்டு வாடையே ஆகாத ஒன்றோ, எப்படி சிலருக்கு வெண்டைக்காயே வேண்டாத ஒன்றோ, அப்படி பழக்கம் இல்லாதவருக்கு, இதுவும் அறுவோறுப்பாகவே இருக்கும். ஆனால், பிறந்ததில் இருந்து வீட்டிலும், சுற்றுப்புறத்திலும் ஈசலை உணவாகப் பார்த்து வளர்ந்த என் போன்றவர்களுக்கு இது எதார்த்தமான உணவே! இந்தப் பதிவின் நோக்கம் எல்லோரும் ஈசல் சாப்பிடவேண்டும் என்பதல்ல. உணவுப் பழக்கங்கள், இடம்தோறும், காலம்தோறும், கலாச்சாரந்தோறும் மாறும் ஒன்று. இதில் உங்களுக்கு மிகவும் பிடித்தது மற்றவருக்கு முற்றிலும் ஒவ்வாத ஒன்றாகவும், உங்களுக்கு கேட்கவே சகிக்காத ஒன்று மற்றவர் நாக்குக்கு சுவையானதாகவும் இருக்கலாம். உங்கள் உணவை அவர் வாயிலும், அவர் உணவை உங்கள் வாயிலும் திணிக்காத வரையில், யாரும் வாந்தி எடுக்கத் தேவை இல்லை. உங்கள் உணவை உங்கள் வாயிலிருந்தும், அவர் உணவை அவர் வாயிலிருந்தும், பிடுங்காத வரை, யாரும் ஆத்திரப்படவும் தேவையில்லை.

எப்படிப் பிடிப்பது?

மழை நாட்களில், மின்விளக்குகள் முன் படபடக்கும் சிறகுகளுடன் நடனமாடும் ஈசல்களை பார்க்காதவர்கள் வெகு சிலரே! இன்று நகரங்களிலும், வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்களுக்காக கீழே அதன் படத்தை இணைத்துள்ளேன். முதலில் நீங்கள் பிடிக்கும் ஈசல் உண்ணத்தகுந்ததா என்று சரிபார்த்துக் கொள்வது அவசியம். விவரம் தெரிந்த நண்பர்களிடம் கேட்பது நல்லது. ஈசல் என்று பறக்கும் எறும்புகளை பிடித்த சிறுவர்களையும் என் இளம் வயதில் கண்டதுண்டு. பெரும்பாலும் மாலை நேரமே ஈசல் வேட்டைக்கு உகந்தது (அப்போதுதான் அவை வீடுகள் நோக்கிப் படை எடுக்கும்). அதிகாலையிலும் சில சமயங்களில் வயல்வெளிகள், புல்வெளிகள் போன்ற இடங்களில் ஈசல் கூட்டம் சுற்றுவதுண்டு.
நன்றி: விக்கிமீடியா
ஒரு சொம்பு அல்லது தம்பளரில் கால்பங்கு நீர் நிரப்பிக்கொள்ளவும். ஈசல்கள் அதிகம் சுற்றும் இடத்தில் அமர்ந்து அவற்றைக் கையால் பிடிக்கவும். பயம் வேண்டாம்... அவை உங்களை ஒன்றும் செய்யப் போவதில்லை! பிடித்த ஈசலை நீரில் போடவும். அதன் சிறகுகள் நீரில் பட்டவுடன் பெரும்பாலும் உதிர்ந்துவிடும். இல்லையென்றாலும் அவை பறக்கும் தன்மை போய்விடும். சிறிது நேரத்தில் பாத்திரம் நிரம்பி விடும். பின்பு ஒரு முறத்திலோ, அகலமான தட்டிலோ அல்லது சொளவிலோ ஈசல்களைப் பரப்பி காய வைக்கவும். ஒன்றிரண்டு ஈசல்கள் நடந்து தப்ப முயலலாம்! மறுநாள் வெயில் வந்தால் ஈசல்களை வெயிலில் காயவிடவும். காய்ந்தபின் லேசாகப் பரசி சிறகுகளை நீக்கவும். நன்று காய்ந்த ஈசல்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் அரிசிப்பொரி போல இருக்கும்.

எப்படிச் சமைப்பது?

அரிசிப்பொறி, பொட்டுக்கடலை (வறுகடலை/உடைத்தகடலை), உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சிறிது எண்ணை விட்டு வாணலியில் மிதமான சூட்டில் வறுக்கவும். கலகலவென நன்கு வறுபட்டவுடன், தட்டில் வைத்துப் பரிமாறவும்! குளிர்கால மாலைகளில் எளிதாகக் கிடைக்கும் இந்த புரதம் நிறைந்த ஈசல் வறுவலின் சுவையும் அருமையாக இருக்கும்.

சிலர் (நானும்கூட) ஈசல்களைப் பிடித்தவுடன் பச்சையாக உண்பர். சமைக்காத நிலையில் அதன் சுவை, பால்க்  கருது (சோளம்) போல இருக்கும். பச்சை(சமைக்காத) ஈசல் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என்றாலும், அதற்குமுன் அது ஏதாவது அசுத்தமான இடங்களில் அமர்ந்திருந்தால் நோய்த்தொற்று ஏற்படலாம். ஆகவே சமைத்து உண்பது சாலச்சிறந்தது!

புறநானூற்றில் ஈசல் உணவு!

சில வருடங்கள் முன்பு, தமிழாசிரியரான என் தந்தை புறநானூற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதில் 119-வது பாடலில் ஈசல்களை மோருடன் சேர்த்துப் புளிச்சாறு (புளிச்சோறு கிண்டப் பயன்படுவது) தயாரித்ததாகக் குறிப்புள்ளதை எனக்குச் சொன்னார். இப்படியும் ஈசலை சமைக்க முடியுமா?!? ஒருமுறை முயற்சி செய்ய வேண்டும்! தற்போது நகரத்தில் வாழும் எனக்கு வாய்ப்பிருக்கும் போது இதை முயற்சி செய்து பார்த்துவிட்டுச் சொல்கிறேன்!

குறிப்பு: இந்த இடுகை 2010ஆம் ஆண்டு வேறு ஒரு வலைப்பூவில் நான் ஆங்கிலத்தில் எழுதிய இடுகையின் சில மாறுபாடுகள் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு.

Monday, April 17, 2017

தடுப்பூசி குறித்த சீமானின் அபாயகரமான நிலைப்பாட்டுக்கு ஒரு சவால்....

தடுப்பூசிகள் தேவையே இல்லை, மரபுவழி மருத்துவமும், சுத்தமான காற்று/நீர்/உணவும் நோய்களில்லாத வாழ்வைத்தரும் என்று திரைப்பட நடிகர் சீமான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சொன்னார். யாரும்  சுத்தமான காற்றும், நீரும், உணவும் வேண்டாம் என்றோ, இவற்றால் பயன் இல்லை என்றோ சொல்ல முடியாது. நம்முடைய பிரச்சனை அதுவல்ல. தடுப்பூசிகள் தேவையில்லை என்று முரண்டு பிடிக்கும் முட்டாள்தனமே நம் பிரச்சனை.

நோய்கள் கண்ணுக்குப் புலப்படாத பாக்டீரியா, வைரஸ் மற்றும் இதர நுண்ணுயிரிகளால் வருவதை அவர் மறுக்கிறாரா? நோய்கள் பலவகைப்படும். பிறவிக்கு குறைபாடுகள், சத்துப் பற்றாக்குறை, உடலில் ஏற்படும் மாற்றங்கள், பரம்பரை வியாதிகள், உணவு/வாழ்க்கை முறையினால் வரும் நோய்கள், தொற்று வியாதிகள் என்று பல உள்ளன. இதில், தடுப்பூசிகள் தொற்று நோய்களையே பெரும்பாலும் தடுக்கின்றன. இப்படி இருக்க, சீமானின் பேச்சு, வாழ்க்கைமுறையினால் வரும் நோய்களைப்போல தோற்று நோய்களையும் உணவு, உடற்பயிற்சி போன்ற வழிகளில் சரி செய்துவிடலாம் என்பது போல உள்ளது.

நாம் சற்று பின்னோக்கிப் பார்த்தால், நம் நாட்டு மரபுவழி மருத்துவங்களில்கூட பல தோற்று நோய்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. இந்த நோய்கள் நவீன அறிவியல் மற்றும் செயற்கை உரம்/பூச்சிக்கொல்லி/மாசு ஆகியவை தோன்றும் முன்பே இருந்துள்ளன என்பதற்கு நம் நாட்டு மருத்துவ முறைகளான சித்த/ஆயுர்வேத நூல்களே சான்று. மேலும், வாழ்க்கைமுறை மாற்றங்களால் இன்று நம்மை அதிகம் தாக்கும் நோய்கள்கூட அன்றே இருந்துள்ளன. அவற்றின் அளவு குறைவாக இருந்தது என்பதே சரி. ஆகா, சீமான் சொல்வது சரி என்றால், எதனால் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நம் முன்னோர்கள் தொற்று நோய்களுக்கு கொத்துக் கொத்தாக செத்து மடிந்தனர்?

சரி, இப்போது விஷயத்துக்கு வருவோம்... தலைப்பில் உள்ளபடி, சீமானோ, அவரது தம்பிகளோ தடுப்பூசி இல்லாமல் வெறிநாயிடம் கடிவாங்கி தங்கள் வீரத்தை நிரூபிக்க முடியுமா? வெறிநாய் கடிக்கு எந்த உணவு மருந்தாகும் சீமான் அவர்களே? உங்கள் பாரம்பரியம் பண்பாடு என்ற போலி இனஉணரவுக்கு மயங்கி, தமிழர்களின் பிள்ளைகள் நோய்கள் வந்து உயிரையே, நல்ல உடல் நலத்தையோ இழந்தால் அதற்க்கு நீங்கள் பொறுபேர்ப்பீர்களா? ஒரு சமுதாயத்தையே அறிவுக்குருடராக்குவதே உங்கள் வேலையா?

சீமான் மற்றும் அவர் தமபிகளுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்... ஒருவன் தன்  நம்பிக்கையினால் தான் பெற்ற பிள்ளையை நரபலி கொடுப்பது சரியா? அதுபோலவே உங்கள் போலி இணைப் பெருமிதத்தால் குழந்தைகளின் உயிரோடும் உடல்நலத்தோடும் விளையாடுவதும் தவறே! உங்கள் நம்பிக்கையும் மூட நம்பிக்கையே!

Monday, January 2, 2017

கொஞ்சம் படிங்க பாஸ்! - பகுதி 6

நூலின் தலைப்பு: அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு
ஆசிரியர்: பில் பிரைசன் (தமிழில் மொழிபெயர்த்தவர்: ப்ரவாஹன்)
பக்கங்கள்: தமிழில் 640 / ஆங்கிலத்தில் 560
வெளியீடு: பாரதி புத்தகாலயம் / பிராட்வே புக்ஸ்
மொழி: தமிழ் / ஆங்கிலம்
விலை: ~ ரூ. 450/-
வயது: 16+
பொருள்: அறிவியல், வரலாறு
இந்தப் புத்தகம் முழுமையானதோ, துல்லியமானதோ கிடையாது. அறிவியல் குறித்த ஒரு மசாலா வரலாறு. பொதுவாக இதுபோன்ற புத்தகங்களை நான் விரும்புவதில்லை. ஆனால் இந்தப் புத்தகம் ஒரு விதிவிலக்கு. காரணம், பல்வேறு காலங்களில், பல்வேறு அறிவியல் துறைகளில் நடந்த நிகழ்வுகளை ஒரே புத்தகமாக படிக்க முடிவதே! 500 பக்கங்கள் மேல் இருந்தாலும் வாசிக்க வாசிக்க பக்கங்கள் புரள்வது தெரியாத வண்ணம் பில் பிரைசன் எழுதியுள்ளார்.

நூலின் பெரும்பகுதி வளவளவென்று கதைபோல உள்ளது ஒரு குறையே. ஆனால் அது அறிவியல் நாட்டம் இல்லாதவர்களும் வாசிக்க உதவும்வண்ணம் இருப்பதால் பெரிய குறையாகத் தெரியவில்லை. நான் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாதிப்புகளைப் படித்துள்ளேன். ஆங்கிலப் பதிப்பு கருத்திலும் நடையிலும் சிறப்பாக உள்ளது. ஆங்கிலத்தில் வாசிக்கவே முடியாதவர்கள் மட்டும் தமிழ் மொழிபெயர்ப்பை நாடலாம்.

English Summary:  

Book Title: A Short History of Nearly Everything
Author: Bill Bryson (Tamil Translation by: Pravaahan)
Pages: 560 (in English) / 640 (in Tamil)
Publisher: Broadway Books / Bharathi Puththagalayam
Language: English / Tamil
Price: ~ Rs. 450/-
Age Group: 16+ 
Category: Science, History

Tuesday, November 1, 2016

கொஞ்சம் படிங்க பாஸ்! - பகுதி 5

நூலின் தலைப்பு: கிரகணங்களின் நிழல் விளையாட்டு
ஆசிரியர்: த.வி. வெங்கடேஸ்வரன்
பக்கங்கள்: 64
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
மொழி: தமிழ்
விலை: ~ ரூ. 40/-
வயது: 12+
பொருள்: அறிவியல், வானியல், வரலாறு

கிரகணங்கள் எப்படித் தோன்றுகின்றன, அவற்றின் வகைகள், மற்றும் தன்மைகளைத் தொகுத்து வழங்குகிறது இந்தச் சிறிய புத்தகம். மேலும் கிரகணங்களைக் குறித்த மூட நம்பிக்கைகளை நீக்கவும் இந்நூல் உதவும். நூலின் இறுதியில் சற்றும் முன் வந்த மற்றும் வரவிருக்கும் கிரகணங்கள் அட்டவணையும் தரப்பட்டுள்ளது. கிரகண ஆராய்ச்சி குறித்த வரலாறும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.

வழக்கம் போல் ஆசிரியர் த. வி. வெங்கடேஸ்வரன் அவர்கள் தன்னுடைய ரத்தினச்சுருக்க தொனியில் தகவல்களைத் தொகுத்து பல விளக்கப் படங்கள் துணையோடு இந்நூலை வழங்கியுள்ளார். சில பகுதிகளில் வாக்கிய மற்றும் எழுத்துப்பிழைகள் சரிபார்க்கப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். தமிழில் இதுபோன்ற படைப்புகள் வெளிவருவது பாராட்டப்படவேண்டிய ஒன்று!

English Summary:  

Book Title: Kiraganangalin Nilal Vilayaattu (Shadow Games of Eclipses)
Author: T. V. Venkateswaran
Pages: 64
Publisher: Bharathi Puththagalayam
Language: Tamil
Price: ~ Rs. 40/-
Age Group: 12+ 
Category: Science, Astronomy, History

Thursday, August 25, 2016

லினக்ஸுக்கு வயசு 25!

1991-ஆம் ஆண்டு லினஸ் பெனடிக்ட் டோர்வால்ட் (Linus Benedict Torvalds) என்னும் ஃபின்லாந்து நாட்டுக் கணினியியல் மாணவரால் ஒரு பொழுதுபோக்காக ஆரம்பிக்கப் பட்டதே இந்த லினக்ஸ். லினக்ஸ் என்பது முழுமையான இயங்குதளம் (OS) இல்லை. அது இயங்குதளத்தின் கெர்னல் (Kernel) எனப்படும் உட்கருவாகும். லினக்ஸ் கெர்னல் கிணு-வுடன் (GNU) சேர்ந்து கிணு/லினக்ஸ் (GNU/Linux) இயங்குதளத்தை சாத்தியப்படுத்தியது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் லினக்ஸின் ஆரம்ப நாட்கள் குறித்து லினஸ் டோர்வால்ட் கூறுகையில், "அது முழுவதும் ஒரு தனிநபர் செயல்பாடாகவே இருந்தது" என்கிறார். மேலும் 1991-ஆம் ஆண்டு அவர் லினக்ஸ் குறித்து எழுதிய முதல் பதிவில், "இது கிணு போன்று திட்டவட்டமானதாக இல்லாமல் ஒரு பொழுதுபோக்குக்கான ஒன்று" என்று குறிப்பிட்டிருந்தார்.
கிணு இயங்குதளத்திற்கான வேலைகள்  அமெரிக்கரான ரிச்சர்டு ஸ்டால்மன் (Richard Stallman) தலைமையில் வழிநடத்தப்பட்டு வந்த நேரம் அது. ஏறத்தாழ முழு இயங்குதளமும் முடியும் தருவாயில் இருந்த நிலையில் அதற்குத்தேவையான ஹர்ட் (Hurd) உட்கரு (கெர்னல்) மட்டும் தேக்கநிலையில் இருந்தது (இன்றும் அப்படியே உள்ளது!). மினிக்ஸ் (Minix) என்னும் மாற்று இருந்த போதிலும் அது கட்டற மென்பொருளாக (Free Software) அப்போது இல்லை.  அந்த நேரத்தில் யாரும் எதிர்பாராத வண்ணம் ஃபின்லாந்திலிருந்து உதவி வந்தது.
ஃபின்லாந்து நாட்டின் ஹெல்ஸின்கி பல்கலையில் கணினியியல் துறையில் பயின்று வந்த லினஸ் இணையத்தின் மூலம் தன்னுடைய கெர்னலை வெளியிட்டார். மேலும் அதை கிணு பொது உரிமத்தின் (GPL - GNU General Public License) கீழ் வெளியிட்டார். அப்போது மினிக்ஸ் கெர்னலை எழுதிக்கொண்டு இருந்த ஆண்ட்ரு டனேன்பௌம் (Andrew Tanenbaum) லினக்ஸின் கட்டமைப்பு மோசமானது என்றும் தன்னுடைய மைக்ரோ-கெர்னல் கட்டமைப்பே சீரியதென்றும் விவாதித்தார். அதற்க்கு லினஸ் தன்னுடைய கெர்னல் ஒரு சிறிய அளவிலான ஆதாயமற்ற மென்பொருள். மேலும் அது இன்டெல் 80386 சிப்பிற்கு மட்டுமே எழுதப்படுவது என்று கூறினார்.
ஆனால் இன்றோ இந்த லினக்ஸ் கெர்னல் நீக்கமற எங்கும் நிறைந்துள்ளது. உங்கள் கைப்பேசியில் உள்ள ஆண்ட்ராய்டு இயங்குதளம் முதல் பங்குச்சந்தைகள், நீர்மூழ்கிக்கப்பல்கள், குளிர்சாதனப்பெட்டிகள், தொலைக்காட்சிகள், விண்வெளியில் சுற்றும் செயற்கைக்கோள்கள் வரை பல இடங்களில் லினக்ஸ் ஊடுருவியுள்ளது. உலகில் உள்ள மிக வேகமான 500 சூப்பர் கம்ப்யூட்டர்களில் ஒருசிலவற்றைத் தவிர அனைத்தும் லினக்ஸ் கெர்னல் மூலமே இயங்குகின்றன.
கைப்பேசிச் சந்தையில் ஆண்ட்ரைடுக்குப் போட்டியாக இருக்கும் ஒரே இயங்குதளம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-ஓ.எஸ். ஆனால் ஆப்பிள் நிறுவனத்தால் கணினிகளில் (மேசைமேல் மற்றும் மடிமேல்) ஒன்றும் சாதிக்க முடியவில்லை. மேலும் ஃபயர் ஃபாக்ஸ், டைசன் இயங்குதளங்களும் லினக்ஸ் உட்கருவையே பயன்படுத்துகின்றன. இதற்க்கு நேர்மாறாக கணினிகளில் மேலாதிக்கம் செலுத்தும் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் இயங்குதளம் கைப்பேசிகளில் சொற்ப அளவிலேயே பயன்படுகிறது. ஆனால் கைபேசி மற்றும் கணினிகள் என்று மொத்தமாகப் பார்த்தல் லினக்ஸ் உட்காருவே அதிகமாக பயன்பாட்டில் இருக்கிறது. இணையத்தை இயக்கும் சர்வர்கள் (server) பெரும்பாலும் கிணு/லினக்ஸிலே இயங்குகின்றன. இந்த அடிப்படையில் இன்று உலகிலேயே அதிகமாகப் பயன்பாட்டில் உள்ள இயங்குதள உட்கரு லினக்ஸே!

இதன் வெற்றிக்கு முழுக்காரணமும் யாருக்கும் சேராது. இது ஒரு கூட்டு முயற்சியே! இன்றைய நிலையில் லினக்ஸ் நிரலில் வெறும் 0.2% பங்களிப்பே லினஸ் டோர்வால்டிடம் இருந்து வருகிறது. இணையமும் தொழில்நுட்ப முன்னேற்றமும் பல புதிய வழிகளைத் திறந்துள்ளன. 25 ஆண்டுகளுக்கு முன் இருந்த இணையமும் கணினியும் சாதிக்க முடிந்த ஒன்றை இன்றைய நிலையில் 4ஜி-யும் ஸ்மார்ட்போனும் கொண்டு நாம் செய்ய முடியாதா? கூட்டு முயற்சியும், ஒத்துழைப்பும், ஆர்வமும், தேடலும் இருந்தால் லினக்ஸ் போன்ற எண்ணற்ற புதிய படைப்புகள் தோன்றும். அது கணினித்துறையில் மட்டுமே இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை. மருத்துவம், வேளாண்மை, வாணியல் என்று எந்தத் துறையிலும் இருக்கலாம்! வாருங்கள் அறிவைப் பகிர்ந்து ஆற்றலைப் பெருக்குவோம்!

Friday, August 12, 2016

மனிதனின் பரிணமிப்பு

லெமூர்

ஹோமோ சேபியன்ஸ் (Homo sapiens) என்னும் நம் இனம் (species எனும் உயிரியல் வகைப்பாடு) முதனி (Primates) எனப்படும் வரிசையைச் (order எனும் உயிரியல் வகைப்பாடு) சேர்ந்தது. அப்படிப் பார்த்தால் உயிரியல் படி, லெமூர், தேவாங்கு, குரங்கு போன்ற உயிரினங்கள் நம் நெருங்கிய சொந்தங்கள்.

முதனி வரிசையில் நாம் ஹோமினிடே (Hominidae) எனப்படும் குடும்பத்தைச் (family எனும் உயிரியல் வகைப்பாடு) சேர்ந்தவர்கள். இதில் சிம்பான்ஸீ மற்றும் போனோபோ குரங்குகள் அடங்கும். அதாவது இவை நம் மிக நெருங்கிய சொந்தங்கள்.

நாம் வாலில்லாக் குரங்குகள் போன்ற மூதாதையர்களிடம் இருந்து தற்போதுள்ள நிலையை பரிணாம வளர்ச்சி மூலம் அடைய ஏறத்தாழ 60 லட்சம் ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது.

நம் (மனிதர்களுக்கும் முந்தைய) மூதாதையர்கள் இரு கால்களில் நடக்கக் கற்றுக்கொண்டு ஏறத்தாழ 40 லட்சம் ஆண்டுகள் ஆகிறது.

ஏறத்தாழ 10 முதல் 20 வகை மனித இனங்கள் இருந்திருக்கலாம் என இன்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அதில் எஞ்சி இருப்பவர்கள் நாம் மட்டுமே!

மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியின் பெரும் பகுதி ஆபிரிக்கக் கண்டத்தில் நடந்தது.
கல்லாலான கருவிகள்
ஏறத்தாழ 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் கல்லாலான கருவிகளை பயன் படுத்தியுள்ளனர். நினைவிருக்கட்டும், இவர்கள் நம்மைப்போன்ற சேபியன்ஸ் இனத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. சேபியன்ஸ் இனம் இன்னும் தோன்றவே இல்லை!

23 லட்சம் ஆண்டுகளுக்கு முன் சமைத்து உண்ணும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

மனிதர்களில் சிலர்/சில இனங்கள் (இவர்களும் நம் போன்ற ஹோமோ சேபியன்ஸ் இல்லை) ஏறத்தாழ 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறி வேறு பகுதிகளில் குடியேறி உள்ளனர்.

குறைந்தது 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே நெருப்பை உருவாக்கவும் கையாளவும் மனிதர்கள் கற்றுக்கொண்டனர்.

ஹோமோ எரெக்ட்ஸ் என்னும் (தற்போது அழிந்துவிட்ட) மனித இனம் 4 முதல் 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு சிப்பிகளில் செதுக்கு வேலைப்பாடுகள் செய்த தடையங்கள் கிடைத்துள்ளன.

சேபியன்ஸ் என்னும் நம்முடைய இனம் சற்றுமுன்னமே(!) தோன்றிய இனம். ஆம். நம் இனம் தோன்றி ஏறத்தாழ 2 லட்சம் வருடங்களே ஆகிறது.

சேபியன்ஸ் இனமும் ஆப்பிரிக்காவில் தோன்றியதே. அதன் பின்னரே நம் முன்னோர்கள் வேறு கண்டங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

1 லட்சத்து 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆடை அணியும் பழக்கம் வந்திருக்கலாம் என்று பேன்களின் மரபணு ஆராய்ச்சி மூலம் அறிய முடிகிறது. தலையில் இருக்கும் பேன் ஆடைகளில் வாழும் விதத்தில் பரிணமித்துள்ளதிலிருந்து இதை அறிய முடிகிறது.

1 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டங்களுக்கு சேபியன்ஸ் இனம் இடம்பெயர்ந்துள்ளதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

முறையான பேச்சு மொழி 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவாகி இருக்கலாம். மனிதர்கள் இதே சமயம் ஓவியங்கள் வரைய ஆரம்பித்ததற்கான தடையங்கள் கிடைத்துள்ளன. புராதன மொழி (மொழி போன்ற அமைப்புள்ள சத்தங்கள், சைகைகள்) ஏறத்தாழ 20 லட்சம் ஆண்டுகளாக மெதுவாக வளர்ச்சி பெற்றிருக்கலாம்.

60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆஸ்த்திரேலியாவிலும் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க கண்டத்திலும் தற்கால மனிதர்கள் குடியேறியுள்ளனர்.
எலும்பினாலான புல்லாங்குழல்
ஏறத்தாழ 40 ஆயிரம் ஆண்டுகள் பழமையான எலும்பினாலான புல்லாங்குழல்கள் கிடைத்துள்ளன.

ஏறத்தாழ 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட எலும்பாலான ஊசிகள் கிடைத்துள்ளன.

விவசாயம் கண்டுபிடிக்கப்பட்டு 15 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஆண்டுகளே ஆகிறது.

பின்குறிப்பு:

இவை அனைத்தும் நான் வாசித்த/கேட்ட தகவல்களின் தொகுப்பாகும். இவற்றில் தவறுகள் இருக்க வாய்ப்புள்ளது. அறிவியல் கருத்துகளும் கோட்பாடுகளும் புதிய தடயங்கள், ஆராய்ச்சிகள் வருகையால் மற்றம் அடைவது இயல்பே. ஆகவே இந்தத் தொகுப்பில் உள்ள சில தகவல்கள் மற்றம் பெறலாம். அப்படி மாறும் போது ஏற்படும் தவறுகள், காலகட்டங்கள் அல்லது உயிரியல் வகைப்பாடு குறித்ததாக இருக்குமே அன்றி முற்றிலும் பிழையாக இருக்காது. ஒருநாள் அறிவியல் உலகம் பரிணாமம் பொய் என்று சொல்லும் என்று பகல்க் கனவு காண வேண்டாம்!

நன்றி: விக்கிமீடியா (Wikimedia)

Wednesday, August 10, 2016

செவ்வாய் தேசம்

தலைப்பை "செவ்வாய் தோஷம்" என்று வாசித்திருந்தாலோ, "செவ்வாய் தோஷம்" என்பதைப் பிழையாக "தேசம்" என்று எழுதிவிட்டேன் என்று நீங்கள் நினைத்திருந்தாலோ இந்தப் பதிவு உங்களுக்கானதல்ல. செவ்வாயும் சூரியனைச் சுற்றும் ஒரு சாதாரண கோள். அது பூமியில் மனிதன் உயிர்கள் தோன்றுவதற்கு முன்பிருந்தே இவ்வாறு சுற்றி வருகிறது. பூமியின் உயிர்கள் எதிர்காலத்தில் அழிந்து போனாலும், அதன் பின்னும் அது சுற்றும். அகா இந்தக் கோளுக்கும், உங்கள் வாழ்க்கைக்கும் (நீங்கள் விண்வெளி ஆராய்ச்சி/பயணம் தொடர்பான வேளைகளில் இல்லாத பட்சத்தில்) எந்தத் தொடர்புமில்லை. சரி, செய்திக்கு வருவோம்.
செவ்வாயின் மணல் மேடு
நாஸா (NASA) 2005-ஆம் ஆண்டு முதல் அதன் ஹைரைஸ் (HiRISE) நிழற்படவி (கேமரா) கொண்டு எடுத்த ஆயிரக்கணக்கான படங்களை வெளியிட்டுள்ளது. அதிதுல்லியமான இப்படங்கள் செவ்வாயின் பள்ளங்கள், மணல் மேடுகள், பனி முகடுகள் போன்ற பல அழகிய அம்சங்களை வெளிக்கொணர்ந்துள்ளன. இதை கீழ்காணும் இணைப்பில் காணலாம்.

http://www.uahirise.org/katalogos.php


26 மாதங்களுக்கு ஒருமுறை சூரியனும் செவ்வாயும் பூமியின் எதிர்-எதிர் பக்கங்களில் சில வாரங்கள் இருக்கும். அப்படி இருக்கும் போது சூரியக் கதிர்வீச்சின் பாதிப்பு இல்லாததால் செவ்வாயில் உள்ள "செவ்வாய் கண்காணிப்புச் செயற்கைக்கோள்" (Mars Reconnaissance Orbiter) பூமியில் உள்ள கட்டுப்பாட்டு நிலையத்துடன் தெளிவான தகவல் தொடர்பை ஏற்படுத்த முடியும். அதன் மூலம் மிக அதிக தகவல்களை அனுப்பவும் முடியும்.
வறண்ட நீர்ப் படுகை?
அது போன்ற ஒரு வாய்ப்பு கடந்த மே மாதம் கிடைத்தது. இதில் சிறப்பு என்னவென்றால், இந்த மே மாதம் சூரியன் செவ்வாயின் மத்தியக்கோட்டின் (equator) மீது செங்குத்தாக இருந்தது. இதனால் செவ்வாயின் வாட முனை (துருவம்) முதல் தென் முனை வரை வெளிச்சம் கிடைத்தது. இப்படங்கள் எதிர்காலத்தில் அனுப்பப்படும் செயற்கைக்கோள்கள் தரையிறங்கத் தகுதியான இடங்களைத் தேர்வு செய்யவும் பயன்படும்.

அனைவரும் குடும்பத்துடன் பார்த்து மகிழுங்கள்!!!

நன்றி:

NASA

https://science.slashdot.org/story/16/08/10/016204/nasa-publishes-a-thousand-photos-of-mars

https://www.engadget.com/2016/08/09/nasa-hirise-photos-mars/

http://www.uahirise.org/katalogos.php

Friday, August 5, 2016

வேடிக்கையான இணைய விதிகள் 5

நாம் அனைவரும் நம் கருத்துக்கள் (மட்டுமே) சரி என்றும், பிறர் தவறான புரிதலில் உள்ளனர் என்றும், அவர்களை இணைய விவாதம் மூலம் திருத்திவிடலாம் என்றும் எண்ணி, பின்னூட்டங்களையும், பதிவுகளையும் எழுதித் தள்ளுகிறோம். அவற்றையும் விளக்கச் சில விதிகள் உள்ளன. வேடிக்கையாகச் சொல்லப்பட்டாலும் அவற்றில் உண்மையும் உண்டு. அவற்றில் நான் ரசித்த 5 விதிகளை இங்கே குறிப்பிடுகிறேன்.
1. போம்மர் விதி (Pommer's Law)

இணையத்தில் வாசிக்கும் தகவல்களினால் ஒருவரின் கருத்துகளை/எண்ணங்களை மாறலாம். அந்த மாற்றம் அறியாமையில் இருந்து தவறான புரிதலை நோக்கியதாக இருக்கும்.

2. ஸ்கிட் விதி (skitt's Law)

அடுத்தவர் பதிவில் இருக்கும் எழுத்து/இலக்கணம்/நிறுத்தற்குறி (punctuation) தவறைச் சுட்டிக்காட்ட எழுதப்படும் பதிவில், குறைந்தது ஒரு தவறாவது இருக்கும்.

3. தாந்த் விதி (Danth's Law)

ஒருவர் ஒரு இணைய விவாதத்தில் வென்றதாகக் கூறிக்கொண்டால் அவர் அதில் கேவலமாகத் தோற்றுப்போய் இருக்க வாய்ப்பு அதிகம்.

4. காட்வின் விதி (Godwin's Law)

ஒரு இணைய விவாதம் நீள நீள, எதிர் தரப்பை ஹிட்லர்/நாஜி-யோடு ஒப்பிடும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

5. வியப்புக்குறி விதி (Law of Exclamation)

ஒரு பதிவில் எந்த அளவுக்கு அதிகமாக வியப்புக்குறிகளும் பெரிய எழுத்துகளும் (bold/capital letters) இருக்கின்றனவோ அந்த அளவுக்கு அது பொய்யாக இருக்க வாய்ப்பு அதிகம்.

Monday, August 1, 2016

கொஞ்சம் படிங்க பாஸ்! - பகுதி 4

நூலின் தலைப்பு: ஃபிரான்கென்ஸ்டீன் (Frankenstein)
ஆசிரியர்: மேரி ஷெல்லி
பக்கங்கள்: 352
வெளியீடு: பென்குவின் இந்தியா
மொழி: ஆங்கிலம்
விலை: < ரூ. 200/-
வயது: 15+
பொருள்: திகில், மெய்மையியல், கற்பனை

இயந்திர மனிதர்கள் சாத்தியம் என்று யாரும் கனவிலும் எதிர்பார்க்காத காலத்தில் (1818-ஆம் ஆண்டு) எழுதப்பட்ட நூல் இது. உலகறிந்த கவிஞர் ஷெல்லியின் மனைவி மேரி ஷெல்லி எழுதிய இந்நூல், வெறும் திகிலூட்டும் கற்பனைக் கதையாக நின்றுவிடாமல், ஆழ்ந்த மெய்மையியல்க் (philosophical) கேளிவிகளையும் முன்வைக்கிறது. அதாவது, 'மனிதனால் தன்னைப்போல சிந்திக்கும் திறன் உள்ள ஒரு உயிரை/எந்திரத்தைப் படைக்க முடியுமா? அப்படிப் படைத்தால் விளைவுகள் என்ன? அந்த சிந்திக்கும் திறன் உள்ள உயிரின் மனநிலை என்ன?' போன்ற கேள்விகளை இந்நூல் நம் மனதில் எழுப்புகிறது.

இன்றைய சூழலில், மேற்கத்திய திரைப்படங்களைத் தழுவி மசாலாப் படங்களை எடுத்து, எதோ பல்லாயிரம் ஆண்டுகள் தானே சிந்தித்துச் செதுக்கிய அற்புதப் படைப்பு என்று விளம்பரம் செய்து, காசு பார்க்கும் கூட்டமும், அந்தக் கூட்டம் எது சொன்னாலும் தலையாட்டும் ஆட்டு மந்தைக்கூட்டமும் பெருகியுள்ளன. ஆனால் வாசிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு "கருத்துக்கள் பிறப்பதும் இல்லை; அழிவதும் இல்லை. கருத்துக்கள் தலைமுறைதோறும் மேம்படுத்தவும், காலத்திற்கு ஏற்றாற்போல மாற்றியமைக்கவும் படுகின்றன" எனும் உண்மை புரியும்!

English Summary:  

Book Title: Frankenstein
Author: Mary Shelly
Pages: 352
Publisher: Penguin India
Language: English
Price: < Rs. 200/-
Age Group: 15+
Category: Horror, Philosophy, Fiction

Sunday, July 3, 2016

மிஸ்ர தாளம் (7/4 timing)

மிஸ்ர தாளம் என்பது "த கி ட த க தி மி - த கி ட த க தி மி" என்று செல்லும் தாளமாகும் (அதாவது ஒரு தட்டு ஆறு விரல் எண்ணிக்கை என்று அமைந்தது). ஆங்கிலத்தில் இதை செப்டூல் மீட்டர் (septule meter) என்று கூறுவர். சாதாரணமாக நாம் கேட்கும் பாடல்கள் சதுரச தாளம் என்னும் 4/4 timing -இல் இருக்கும். இதை மேற்கத்திய இசையில் "common timing"  என்றும் கூறுவர். 3/4 மற்றும் 6/8 timing கூட நாம் அடிக்கடி கேட்கும் வாய்ப்பு உண்டு. ஆனால் அத்தி பூத்தாற்போல எப்போதாவது கேட்கும் இந்த மிஸ்ர தாளப்  பாடல்கள் ஒரு தனி ரகம்! தமிழில் நாம் கேட்கும் சில பாடல்கள் இந்த தாளத்தில் அமைந்துள்ளன. அவற்றுள் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
1. காளிதாசன் கண்ணதாசன் - சூரக்கோட்டை சிங்கக்குட்டி (இசை: இளைய ராஜா)
2. கண்ணாலே காதல் கவிதை - ஆத்மா (இசை: இளைய ராஜா)
3. இருவிழி உனது - மின்னலே (இசை: ஹாரீஸ் ஜெயராஜ்) [இது 7/8 timing]
4. பொட்டு வைத்த - இதயம் (இசை: இளைய ராஜா)
5. ஜாதி மல்லிலிப் பூச்சரமே - அழகன் (இசை: M . M . கீரவாணி)
6. மீண்டும் மீண்டும் - விக்ரம் (இசை: இளைய ராஜா)
7. ஆயிரம் மலர்களே - நிறம் மாறாத பூக்கள் (இசை: இளைய ராஜா)

இன்னும் பல பாடல்கல் இந்த மிஸ்ர தளத்தில் அமைந்துள்ளன. ஆனால் 7/8 timing என்பதால் இதை 7 பாடல்களோடு முடித்துக்கொள்கிறேன்.

ஒரு சிறப்புச் செய்தி:
பட்ஜெட் பத்மநாபன் படத்தில் விவேக் மும்தாஜைக் கவர கேரள மாநிலத்தவர் போல வேடமிட்டு வருவார். அதில் அவர் பாடும் தாளம் "த கி ட த க தி மி" என்று மிஸ்ர தாளத்தில் இருக்கும்!