Showing posts with label தடுப்பூசி. Show all posts
Showing posts with label தடுப்பூசி. Show all posts

Wednesday, August 30, 2017

சோவியத் ஒன்றியம் என்ன கிழித்தது?

சோவியத் ஒன்றியம் வீழ்ந்துவிட்டதால் பொதுவுடைமைச் சித்தாந்தமே வீழ்ந்துவிட்டதாக பெரும்பான்மையானோர் கருதுகிறார்கள். ஒரே ஒரு நடைமுறை அமலாக்கம் தோல்வியுற்றதால் அந்த கருத்தாக்கமே தோல்வியடைந்துவிட்டதாக முடிவுகட்டிவிடலாமா? அப்படிப் பார்த்தால் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் பொருளாதார வீழ்ச்சிகள், தாராளமயம்/உலகமயம் அறிமுகமாகிய சில காலத்திலேயே வறுமையிலும், குளறுபடிகளிலும் சிக்கும் எண்ணற்ற நாடுகள் போன்றவை முதலாளித்துவத்தின் தோல்வி என்று ஏன் நாம் எடுத்துக்கொள்வதில்லை? வரலாறு வெற்றிபெற்றவர்களால் எழுதப்படுகிறது என்றால் பரவாயில்லை. சமகாலத்தில் நடந்த நிகழ்வுகளும் திரித்துக்கூறப்படுவது சரியா? நாம் ஒன்றும் சில நூற்றாண்டுகளோ பல ஆயிரம் ஆண்டுகளோ முந்தைய பழைய வரலாற்றைப் பற்றி பேசவில்லை. இன்று 25 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பிறந்தபோது சோவியத் ஒன்றியம் உயிரோடு இருந்தது. வெறும் 25 ஆண்டுகள்... நம் அம்மா அப்பா, தாத்தா பாட்டி என்று எல்லோரும் பார்த்து, கோட்டு, வாழ்ந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் எப்படி இருட்டடிப்பு செய்யப்பட்டன? பொதுப்புத்தியில் இருந்தே அழித்தொழிக்கப் பட்டுவிட்டதே?

வணிகவியல், பொருளாதாரம் போன்ற பட்டப் படிப்பு படித்தவர்களிடம்கூடக் கேளுங்கள், "பங்குச் சந்தையே இல்லாமல் அவ்வளவு பெரிய பொருளாதாரம் கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் பல சோதனைகளைக் கடந்து பற்பல  சாதனைகளைப் புரிந்து வெற்றிநடை போட்டது அவர்கள் பாடத்தில் உண்டா?" என்று. பலருக்கு அது தெரியவே தெரியாது. சிலர் சோவியத் ஒன்றியத்தை நேரடியாக அமெரிக்காவோடோ, ஐரோப்பிய நாடுகளோடோ ஒப்பிட்டு அதன் சாதனைகளை சிறுமைப்படுத்துவதும் உண்டு. அமெரிக்கா போல அடிமைகளின் உழைப்புச் சுரண்டலோ, ஐரோப்பிய நாடுகள் போல காலனிய ஏகாதிபத்தியச் சுரண்டலோ இல்லாமல் வெறும் 75 வருடம் நடந்த பொதுவுடைமை ஆட்சியை பலநூறு ஆண்டுகளாக அடாவடி ஆட்சி புரிந்த நாடுகளுடன் ஒப்பிடுவதா? இதுதான் கல்வி அவர்களுக்குக் கொடுக்கும் புரிதலா?

"ஸ்டாலின் கொடுங்கோல் ஆட்சி புரிந்தார். சோவியத் மக்கள் பஞ்சம் பட்டினியில் செத்தார்கள். அங்கு சுதந்திரமே கிடையாது." என்பன போன்ற பல்வேறு கருத்துக்கள் மக்கள் மத்தியில் நிலவுகின்றன. அவற்றை எல்லாம் இப்போது பேச விரும்பவில்லை. ஒரு பொருளாதார சக்தியாக சோவியத் ஒன்றியத்தின் சாதனைகள் என்ன? 1917ஆம் ஆண்டு நடந்த புரட்சியின் போது, விவசாயக் கூலிகள் பெரும்பான்மையாக வாழ்ந்த, தொழில் புரட்சிக்கு முற்பட்ட, கல்வி அறிவு, மின்சாரம் போன்ற எந்த முன்னேற்றமும் இல்லாத ஒரு மன்னராட்சி நாடகத் தொடங்கிய இவ்வொன்றியம் என்னவெல்லாம் சாதித்தது என்று பார்ப்போம்.

1. அனைவருக்கும் உணவு உறுதிப்படுத்தப் பட்டது. இன்றும் கூட இதுபோன்ற ஒரு உத்திரவாதம் வளர்ந்தநாடுகள் என்று சொல்லிக்கொள்ளும் நாடுகளில்கூட இல்லை!

2. மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் அனைவருக்கும் விலையில்லாமல் கொடுக்கப்பட்டது.
3. அனைவருக்கும் கல்வி உறுதிசெய்யப்பட்டது. கட்டாய, விலையில்லா கல்வி, வயது, இனம், மதம் மற்றும் பாலின வேறுபாடு இல்லாமல் எல்லோரையும் சென்றடைந்தது.

4. உலக அளவில் பெரிய அம்மை நோய் ஒழிப்பில் சோவியத் ஒன்றியத்தின் பங்கு மிகப் பெரியது.
5. உலகிலேயே அதிக புத்தகங்களை அச்சிட்ட நாடு. உலகின் மீத எல்லா நாடுகளும் அச்சிட்ட அளவை விட அதிக நூல்களை அச்சிட்ட பெருமை சோவியத் ஒன்றியத்தைச் சேரும். உலக மொழிகள் பலவற்றிலும் நல்ல நூல்களை தயாரித்து மலிவு விலையில் ஏற்றுமதியும் செய்தது. தமிழில்கூட பல நூல்கள் வெளியிடப்பட்டன.

6. 15% மக்கள்தொகை வளர்ச்சி இருந்த காலத்தில் 55% தொழில் வல்லுநர்கள் வளர்ச்சியை எட்டியது.
7. இசை மற்றும் இதர கலைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப் பட்டது. பெரும்பான்மை மக்கள் இசைக்கருவிகளை வாசிக்கத் தெரிந்தவர்களாக இருந்தனர்.

8. வணிகமயமாக்கப்படாத கல்வி, பொழுதுபோக்கு, தொலைகாட்சி போன்றவை மக்களிடமும் இளைய தலைமுறையினரிடமும் நல்ல விஷயங்களை மட்டுமே எடுத்துச் சென்றன.
9. அனைவருக்கும் விலையில்லா, தரமான மருத்துவம் கொடுத்த முதல் நாடும் இதுவே!

10. பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான ஊதியம் உறுதிசெய்யப்பட்டது.
11. பெண்கள் கல்வி, பொருளாதாரம், அரசியல் போன்ற துறைகளில் பங்கேற்க இருந்த தடைகள் தகர்க்கப்பட்டன.

12. உடல் உறுப்புகள் தானம்/மாற்று அறுவைசிகிச்சைகள் முதலில் வந்ததும் இங்குதான்.
13. புரட்சிக்கு முந்தைய காலத்தை ஒப்பிடும்போது சராசரி ஆயுள்காலம் இரட்டிப்பானது.

14. குழந்தைகள் இறப்பு விகிதம் பத்தில் ஒரு பங்காகக் குறைந்தது.
15. 1972க்குள் 4,84,000 மருத்துவர்கள் மற்றும் 22,24,000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் என்று மருத்டுவத்துறை அபரீத வளர்ச்சி அடைந்தது.

16. பல்வேறு இன, மத, மொழி மற்றும் கலாச்சாரப் பிரிவுகள் இருந்தாலும் ஒப்பீட்டளவில் அமைதியும் ஒற்றுமையும் நிலவியது.
17. இன்று ஐரோப்பியர்கள் நிம்மதியாக இருப்பதற்கு இந்தியா மற்றும் ஆப்பிரிக்க காலனிகளில் இருந்து வந்து இரண்டாம் உலகப்போரில் சண்டையிட்ட வீரர்கள் காரணம். அதுபோல உலகையே அச்சுறுத்திய நாஜி ஜெர்மனியை வீழ்த்த சோவியத் வீர்கள் செய்த தியாகமும் மிகப் பெரியது. கிட்டத்தட்ட 2 கோடி உயிர்களை தியாகம் செய்து ஹிட்லரை வீழ்த்தியது.

18. இந்த பொதுவுடைமை சமுதாயத்தை முளையிலேயே கிள்ளி எரித்துவிட 14 முதலாத்துவ நாடுகள் ஒன்றுதிரண்டு போர்தொடுத்தன. மேலும் உள்நாட்டு சாதிகளும் செய்யப்பட்டன. ஆனால் எல்லாவற்றையும் முறியடித்து சுயமாக முன்னேறி வந்தது சோவியத் ஒன்றியம்.
19. மின்சார  ரயில்,அணுமின் நிலையங்கள், பெரிய அணைகள், பசுமைப் புரட்சி, பற்பல அறிவியல் முன்னேற்றங்கள் என்று 5 ஆண்டுத் திட்டங்கள் மூலம் பல்வேறு துறைகளிலும் சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.

20. வெறும் 40 வருடங்களில் குதிரை வண்டிகளில் போய்க்கொண்டிருந்த மன்னராட்சி, விண்வெளியை எட்டிப்பிடித்த மக்களாட்சியாக மாறியது. சோவியத் விண்வெளியில் செய்த சாதனைகள் தனிப் பதிவாகவே போடவேண்டும்! [இங்கே படிக்கவும்]

இப்போது சொல்லுங்கள். வெறும் 75 ஆண்டுகள்கூட முழுதாக இல்லாத இந்த பொதுவுடைமை கூட்டமைப்பின் சாதனைகள் நாம் எளிதில் கடந்துசெல்லக்கூடியாவைகளா?

நன்றி: http://www.northstarcompass.org

Monday, April 17, 2017

தடுப்பூசி குறித்த சீமானின் அபாயகரமான நிலைப்பாட்டுக்கு ஒரு சவால்....

தடுப்பூசிகள் தேவையே இல்லை, மரபுவழி மருத்துவமும், சுத்தமான காற்று/நீர்/உணவும் நோய்களில்லாத வாழ்வைத்தரும் என்று திரைப்பட நடிகர் சீமான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சொன்னார். யாரும்  சுத்தமான காற்றும், நீரும், உணவும் வேண்டாம் என்றோ, இவற்றால் பயன் இல்லை என்றோ சொல்ல முடியாது. நம்முடைய பிரச்சனை அதுவல்ல. தடுப்பூசிகள் தேவையில்லை என்று முரண்டு பிடிக்கும் முட்டாள்தனமே நம் பிரச்சனை.

நோய்கள் கண்ணுக்குப் புலப்படாத பாக்டீரியா, வைரஸ் மற்றும் இதர நுண்ணுயிரிகளால் வருவதை அவர் மறுக்கிறாரா? நோய்கள் பலவகைப்படும். பிறவிக்கு குறைபாடுகள், சத்துப் பற்றாக்குறை, உடலில் ஏற்படும் மாற்றங்கள், பரம்பரை வியாதிகள், உணவு/வாழ்க்கை முறையினால் வரும் நோய்கள், தொற்று வியாதிகள் என்று பல உள்ளன. இதில், தடுப்பூசிகள் தொற்று நோய்களையே பெரும்பாலும் தடுக்கின்றன. இப்படி இருக்க, சீமானின் பேச்சு, வாழ்க்கைமுறையினால் வரும் நோய்களைப்போல தோற்று நோய்களையும் உணவு, உடற்பயிற்சி போன்ற வழிகளில் சரி செய்துவிடலாம் என்பது போல உள்ளது.

நாம் சற்று பின்னோக்கிப் பார்த்தால், நம் நாட்டு மரபுவழி மருத்துவங்களில்கூட பல தோற்று நோய்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. இந்த நோய்கள் நவீன அறிவியல் மற்றும் செயற்கை உரம்/பூச்சிக்கொல்லி/மாசு ஆகியவை தோன்றும் முன்பே இருந்துள்ளன என்பதற்கு நம் நாட்டு மருத்துவ முறைகளான சித்த/ஆயுர்வேத நூல்களே சான்று. மேலும், வாழ்க்கைமுறை மாற்றங்களால் இன்று நம்மை அதிகம் தாக்கும் நோய்கள்கூட அன்றே இருந்துள்ளன. அவற்றின் அளவு குறைவாக இருந்தது என்பதே சரி. ஆகா, சீமான் சொல்வது சரி என்றால், எதனால் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நம் முன்னோர்கள் தொற்று நோய்களுக்கு கொத்துக் கொத்தாக செத்து மடிந்தனர்?

சரி, இப்போது விஷயத்துக்கு வருவோம்... தலைப்பில் உள்ளபடி, சீமானோ, அவரது தம்பிகளோ தடுப்பூசி இல்லாமல் வெறிநாயிடம் கடிவாங்கி தங்கள் வீரத்தை நிரூபிக்க முடியுமா? வெறிநாய் கடிக்கு எந்த உணவு மருந்தாகும் சீமான் அவர்களே? உங்கள் பாரம்பரியம் பண்பாடு என்ற போலி இனஉணரவுக்கு மயங்கி, தமிழர்களின் பிள்ளைகள் நோய்கள் வந்து உயிரையே, நல்ல உடல் நலத்தையோ இழந்தால் அதற்க்கு நீங்கள் பொறுபேர்ப்பீர்களா? ஒரு சமுதாயத்தையே அறிவுக்குருடராக்குவதே உங்கள் வேலையா?

சீமான் மற்றும் அவர் தமபிகளுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்... ஒருவன் தன்  நம்பிக்கையினால் தான் பெற்ற பிள்ளையை நரபலி கொடுப்பது சரியா? அதுபோலவே உங்கள் போலி இணைப் பெருமிதத்தால் குழந்தைகளின் உயிரோடும் உடல்நலத்தோடும் விளையாடுவதும் தவறே! உங்கள் நம்பிக்கையும் மூட நம்பிக்கையே!

Sunday, February 26, 2017

தடுப்பூசிகள் தேவையே!

தடுப்பூசிகள் தேவையே! அரசு இலவசமாக வழங்கும் எம்.ஆர். தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது. MR (Measles  Rubella) தடுப்பூசி இரு கொடிய நோய்களில் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாக்கும். பணக்காரர்கள் மட்டுமே பெற்று வந்த MMR ஊசி போன்ற இந்த தடுப்பூசியை இன்று நம் அரசு அனைவருக்கும் இலவசமாக்கியுள்ளது. இதற்க்கு நாம் அரசுக்கும், இதை முன்னெடுத்த எல்லோருக்கும் நன்றி சொல்ல வேண்டும். ஆனால் நடப்பது என்ன?
இன்று கையில் செல்போன் மற்றும் ஜியோ தரும் இலவச இணைய இணைப்பை வைத்துக்கொண்டு ஒரு கூட்டம் தடுப்பூசிகளுக்கு எதிராக எழுதி வருகிறது. இவர்களில் யாரும் (முறையாக மருத்துவம் பயின்ற) மருத்துவர்கள் இல்லை. இவர்களில் பெரும்பாலானோர் போலி அறிவியல் துணையோடு பிழைப்பு நடத்தும் அற்ப ஜந்துக்கள். சிலர் மத/ஆன்மீக வியாபாரிகள். இவர்கள் அனைவரும் நம் நாட்டு அரசையும் அறிவியல் மற்றும் மருத்துவ சமுதாயத்தையும் கேள்விக்குள்ளாக்குகின்றனர். யாரும் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர் கிடையாது. ஆனால் கேள்வி கேட்க ஒரு தகுதியும் நியாமமும் இருக்க வேண்டும். சந்தேகம் வேறு, அவதூறு வேறு. நேற்று நான் ஒரு கடைக்குச் சென்றேன். அருகில் இருக்கும் குழந்தைகள் மருத்துவமனையில் ஒரே கூட்டம். கடைக்காரரிடம் கேட்டேன். அவன் கூறிய பதில் என்னை அதிர வைத்தது. எம். ஆர் தடுப்பூசி அறிவிப்பு வந்த நாள் முதல் இங்கு கூட்டம் அலைமோதுவதாகக் கூறினார். மக்கள் அரசை விட, மருத்துவர்களை விட, அறிவியலாளர்களை விட வாட்சாப்பையும் பேஸ்புக்கையும் நம்பும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்ற சிந்தனை என்னை இப்போதும் நெருடுகிறது.

அலுவலகத்தில் அருகில் இருந்த நண்பரிடம் பேசினேன். அவர் சொல்கிறார் "எல்லா வைரஸும் நிலவேம்புக்கு சாகும். எனவே தடுப்பூசி போடா வேண்டாம்" என்று. நான் கேட்டேன், "போலயோ, பெரியம்மை போன்ற நோய்களை நிலவேம்பு அல்லது இயற்க்கை மருத்துவம் மூலம் முற்றிலும் அளித்திருக்க முடியுமா?" என்று. அவர் "கண்டிப்பாக!" என்றார். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது! பொறியியல் படித்து, 3ஜி, 4ஜி என்று சுத்தும் மேதைகளின் பேதைமை இப்படி! முயற்சியை விடாத நான், "வெறி நாயிடம் கடிபட்டாலும் ஊசி போடா மாடீர்களா?" என்றேன். சுதாரித்த நண்பர் "உங்கள் விதண்டாவாதம் தவறு" என்று முடித்துக்கொண்டார்.
என்ன நடக்கிறது இங்கே? இதை எழுதும் நான் கிறிஸ்தவ மிஷனரி என்றோ (என் பெயரை வைத்து), ப.ஜ.க. கட்சிக்காரர் என்றோ (மத்திய அரசு திட்டத்தை ஆதரிப்பதால்), மருந்துக் கம்பெனிகளின் ஏஜென்ட் என்றோ, ஏன், இல்லுமினாட்டி என்றோகூட முத்திரை குத்தப்படலாம். இவர்களைப் பொறுத்தவரையில் உலகத்தில் நடப்பது எல்லாம் சாதி. எல்லாம் பெரிய சூழ்ச்சியின் பகுதி. கேட்டல் "தனி ஒருவன்", "பூலோகம்" என்று ஜெயம் ரவி படங்களை மேற்கோள் காட்டுவார்கள். ஜல்லிக்கட்டு விஷயத்தில்கூட தமிழர்களின் கலாச்சார உரிமை என்ற நேரடி வாதத்தைவிட ஏ1, ஏ2 புரளிவே போராட்டம் வெடிக்க உதவியது. மீத்தேன் திட்டம், கூடங்குளம் அணுஉலை, நியூட்ரினோ ஆராய்ச்சி, ஹைட்ரோகார்பன் திட்டம் என எதை எடுத்தாலும் ஒரு அறிவியல் புறம்பான நிலைப்பாட்டை நாம் எடுப்பது சரியா? தக்க பாதுகாப்பு அம்சங்களும், நியாயமான நிபந்தனைகளுடன்கூடிய ஒப்பந்தங்களும் வேண்டும் என்று கேட்டால் பரவாயில்லை. நம்மாழ்வார் சொன்னார், செந்தமிழன் சொன்னார், ஹீலர் பாஸ்கர் சொன்னார் என்று ஏதாவது ஒன்றைப் பிடித்துக்கொண்டு நாட்டின் வளர்ச்சியை முடக்குவது சரியா?

நீங்கள் செய்யாவேண்டியது ஒன்றே! துறைசார்ந்த வல்லுநர்கள் கருத்தைக் கேளுங்கள். அதுவும் ஒருவர் இருவர் கூறுவதை மட்டும் அல்ல, பெரும்பான்மை வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள். அதை உங்கள் அடிப்படை அறிவைக்கொண்டு அலசி ஆராய்ந்து பாருங்கள். பின் ஒரு முடிவுக்கு வாருங்கள். தடுப்பூசி என்றால் மருத்துவர், அணுஉலை என்றால் அணு விஞ்ஞானிகள் என்று எல்லாவற்றிற்கும் படித்த வல்லுநர்கள் நிறைந்த நாடு நம் நாடு. அவர்களை விட்டு விட்டு தெருவில் போகும் குடுகுடுப்பைக்காரன் அளவுக்கே அறிவு உள்ள, பயத்தையும் பொய்களையும் மட்டுமே விற்று பிழைப்பு நடத்தும் ஆட்களை நம்பினால் நாம் எப்படி வல்லரசு ஆவோம்?

பல லட்சம் குழந்தைகளுக்குப் போடும் ஊசியில் சதி செய்யும் கேவலமான அரசும் மருத்துவர்களும் உள்ள நாடா இந்தியா? இன்னும் உங்களுக்கு இந்த நாட்டின் மீதும் இங்குள்ள அறிவியல் ஆய்வாளர்கள்மீதும் நம்பிக்கை வரவில்லையா? வர வேண்டாம்... குறைந்தபட்சம் உங்கள் குழந்தை விஷயமான தடுப்பூசியை உங்கள் பேஸ்புக்/வாட்சாப் புளுகு மூட்டைகளை ஓரம் கட்டி வைத்துவிட்டு அருகில் உள்ள மருத்துவரையோ அல்லது துறை சார்ந்த நிபினரையோ கேளுங்கள். அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும், தங்களுக்கும் இந்த ஊசியை போடுகிறார்களா என்று கேளுங்கள். அப்போதாவது உங்களுக்கு புரிந்தால் சரி. எக்காரணம் கொண்டும் உங்கள் மூட நம்பிக்கை ஒரு குழந்தையின் ஆரோக்கியத்தில் விளையாட அனுமதிக்காதீர்கள்.