Showing posts with label தமிழ் தட்டச்சு. Show all posts
Showing posts with label தமிழ் தட்டச்சு. Show all posts

Thursday, July 13, 2017

கிஷ் ஓட்டம்

நன்றி: விக்கிமீடியா
ஒரு நேர்மையான விவாதம் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும் உண்மைகள் வெளிவரவும் உதவும். ஆனால் இன்று தொலைக்காட்சிகளிலும் சரி, சமூக வலைத்தளங்களிலும் சரி விவாதங்கள், சொற்கள் நிரம்பிய குப்பைத்தொட்டிகள் போலவே உள்ளன. "கிஷ் காலோப்" (Gish Gallop) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் "கிஷ் ஓட்டம்" என்ற ஒரு தவறான தர்க்க முறை (logical fallacy) குறித்துப் இங்கு பார்ப்போம். டுவேன் டால்பெர்ட் கிஷ் (Duane Tolbert Gish) ஒரு உயிர்வேதி அறிஞர் (Biochemist) மற்றும் இளம் புவி படைப்புவாதி (Young Earth Creationist). இவர் பொதுவாகத் தான் பங்கெடுக்கும் உரையாடல்கள் மற்றும் சொற்போர்களில்  கையாண்ட தவறான விவாத முறையே இன்று அவர் பெயரில் வளங்கப்பட்டு வருகிறது.

கிஷ் ஓட்டம் என்றால் என்ன?

எவ்வளவுதான் படித்தவராக இருந்தாலும், எவ்வளவு நினைவுத்திறன் கொண்டவராயினும், எல்லோர் அறிவுக்கும் ஒரு எல்லை உண்டு. திடீர் என்று ஒரு மேடையில் பல்வேறு தொடர்பற்ற, பொருளற்ற வாதங்களை அடுக்கிக்கொண்டே போனால், முதலில் எதை மறுப்பது, சொல்லியதில் எது உண்மை எது பொய், எப்படி பல்வேறு வாதங்களை ஒரு பதில்கொண்டு மறுப்பது போன்ற பல சிக்கல்கள் உருவாகும். இதனால் அவர்கள் தடுமாறுவதோ, அல்லது முழுமையான விடை சொல்லாமல் போவதோ இயல்பே! இத்தகைய வகையில் விவாதத்தில் வென்றது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதுவே "கிஷ் ஓட்டம்" ஆகும்.

எடுத்துக்காட்டு

கிறிஸ்துமஸ் தாத்தா உண்டா இல்லையா என்று விவாதம் நடப்பதாக வைத்துக்கொள்வோம். வரலாறு மற்றும் அறிவியல் அறிஞர்களும், கிறித்துமஸ் தாத்தா உண்டு என்று நம்பும் சிறுவனும் பங்கெடுப்பதாகக் கொள்வோம். திடீர் என்று அந்தச் சிறுவன், "கிறித்துமஸ் தாத்தா இருப்பது, நாசா ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர், ஜான் வில்லியம்சன் எழுதிய 'வடதுருவ விசித்திரங்கள்' புத்தகத்தில் அவர் புகைப்படம் உள்ளது. சென்ற ஆண்டுகூட என் வீட்டிற்கு வந்து அவர் பரிசு கொடுத்தார். உலகில் என் போல 30 கோடி சிறுவர்கள் அவரை நம்புகின்றனர். நாங்கள் எல்லோரும் முட்டாள்களா, மயில் இறகு குட்டி போடும் பொது கிறிஸ்துமஸ் தாத்தா இருக்க முடியாத? அவர் தாத்தா என்பதால்தானே அவருக்கு தாடி இருக்கிறது? அதுவே அது பாட்டியாக இருந்தால் எப்படி தாடி இருக்கும்? தாடி வெள்ளையாய் இருப்பதே அவர் வயதான தாத்தா என்பதற்கு சான்று. இதுகூடப் புரியாமல் நீங்கள் எப்படி அறிஞர்கள்? 1932 வரை கிறிஸ்துமஸ் தாத்தா பச்சை சட்டைதான் போடுவார். பிறகு அது என் சிவப்பாக மாறியது என்று பெனெடிக் கிங்ஸ்லி என்ற வரலாற்று ஆய்வாளர் எழுதியுள்ளார்" என்று அடுக்கிக்கொண்டேய போகிறான்.
இப்போது நாம் எங்கிருந்து பதில் சொல்லத் தொடங்குவது? முதலில் அந்தச் சிறுவன் கூறியது போல ஆய்வாளர்களும், ஆய்வுகளும் உண்மையில் உள்ளனவா? அப்படி இருந்தாலும் அவை நம்பகத்தன்மை உள்ளனவா? இது உடனுக்குடன் அறியக்கூடியவை அன்று. இதில் இன்னொரு சிக்கலும் உள்ளது. அந்த ஆய்வாளர்களும், ஆய்வுகளும் உண்மையாக உள்ளவையே என்று நிறுவும் சுமை (burden of proof) யாருக்கு உள்ளது? உண்மையில் அது அந்தச் சிறுவனின் பொறுப்பு. ஆனால் இப்போது அப்படிப்பட்ட ஆய்வாளர்களும், ஆய்வுகளும் இல்லை என்று எதிர் அணி நிறுவ வேண்டும். மேலும் விவாதத்துக்குத் தொடர்பில்லாத கிறிஸ்துமஸ் தாத்தா ஆணா பெண்ணா, வயதானவரா இளைஞரா, அவரை எத்தனை சிறுவர்கள் நம்புகிறார்கள் போன்ற வாதங்களை முன்வைப்பதன் மூலம் விவாதம் திசைதிருப்பப்படுகிறது. இவை எல்லாவற்றிற்கும் ஒரே விடையையோ அல்லது ஒரு சில சிறு விடைகளையோ சொல்லி எதிர்கொள்ள முடியாது. ஆனால, அந்த மேடையில் பெரிய விளக்கங்களோ, ஆய்வுகளோ, நூல் தேடல்களோ மேற்கொள்ள நேரமும் வாய்ப்பும் கிடையாது. ஆகவே எதிர் அணி பாடு திண்டாட்டம்தான்.

தாக்கம்

இது போன்ற "கிஷ் ஓட்டங்களை" சமயப் பரப்புரை மற்றும் ஆன்மீக வியபாரம் செய்யும் ஆட்களிடம் அதிகம் பார்க்கலாம். ஒரு மேடையிலோ அல்லது தொலைக்காட்சியிலோ இவ்வாறு பேசுவதன் மூலம், தன் தரப்பு வாதங்கள் சரி போலவும், எதிர்தரப்பு அறியாமையில் மூழ்கியுள்ளது போலவும் காட்டிக்கொண்டு விவாதத்தில் வென்று விட்டது போல பெருமிதம் அடைகிறார்கள் இவ்ரகள். போலி அறிவியல் துணைகொண்டு பிழைப்பு நடத்தும் ஒட்டுன்னிகளும் இத்தகைய பேச்சுக்கள் மூலம் மக்களை முட்டாள்களாக்குகின்றனர். அரசியல்வாதிகளும்கூட இதற்க்கு விதிவிலக்கல்ல. அறிவு நாணயம் (intellectual honesty) அற்ற இதுபோன்ற நடவடிக்கைகளால் உண்மைகள் மறைக்கப்படுவதோடு பொய்கள் மக்களின் மனதில் நிலைநிறுத்தப்படுகின்றன.

என்ன செய்யலாம்?

இது எவ்வளவு பெரிய சமூகக்கேடு என்று கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். இனி விவாதங்களை கவனிக்கும்போது இவ்வாறான தவறான முறைகள் கையாளப்படுகின்றனவா என்று உற்றுநோக்குங்கள். இத்தகைய அறிவு நாணயமற்ற செயல்களைச் செய்பவர்கள் பெரும்பாலும் பொய்யர்களாவே இருப்பர். அத்தகையவர்களை அடையாளம்கண்டு அவர்களைப் பொருட்படுத்தாமல் இருப்பது நலம். எந்த ஒரு மேடை விவாதமோ, தொலைகாட்சி விவாதமோ, வலைத்தள கருத்துப்பதிவு (comment) சண்டைகளோ ஒரு அறிவுப்பூர்வமான முடிவுக்கு வர உதவாது. ஏனென்றால், அறிவு (அறிவியல்/அரசியல்/சமூகம்) என்பது பல ஆண்டுகள் கடின உழைப்பு, வாசிப்பு, கற்றல், புரிதல், ஆய்வுகள் என்று நெடிய வழிப் பயணம். ஒரு குறுகிய கால விவாதம்  அதைத் தீர்மானிக்க முடியாது. அதற்காக விவாதங்கள் வேண்டாம் என்று நான் சொல்லவரவில்லை. அவற்றை வாழ்வியல் உண்மைகளாக நம்பவேண்டாம் என்று சொல்கிறேன்.

"அறிவியலில் தேரோடும் தெருக்கள் கிடையாது. அதன் செங்குத்தான வழிகளில் களைப்போடு ஏறிச் செல்வதற்குத் தயங்காதவர்களுக்கு மட்டுமே அதன் ஒளிமயமான உச்சிகளை எட்டுகின்ற வாய்ப்பு கிடைக்கும்." -காரல் மார்க்ஸ்

Sunday, March 30, 2014

ஆண்ட்ராய்டு கருவிகளில் தமிழ் தட்டச்சு

<<<Read this article in English>>>
<<<இதை ஆங்கிலத்தில் படிக்க>>>
இப்பொழுதெல்லாம் அனைவரும் ஒன்றோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டு கருவிகள் வைத்துள்ளனர். அதே சமயம் இணையத்திலும் நிறைய தமிழ் மொழியில் எழுதப்பட்ட கதைகள், கட்ருரைகள், கவிதைகள், செய்திகள் மற்றும் பல உள்ளன. இவற்றை நாம் வாசிக்க முடியாமல் போவதற்கு முக்கிய காரணம், இவற்றை நாம் எவ்வாறு தேடுவது? கூகிள், யாஹூ, பிங், டக்டக்கோ போன்ற முன்னணி தேடுபொறிகள் தமிழ் வலைத்தளங்களையும் தேடக்கூடியவையே. ஆனால் நாம் எப்படி அதைத் தேடுவது? ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தா? கணினியிலாவது நாம் சில மென்பொருள்களின் மூலமோ ஆன்லைன் மொழிமாற்றிகள் மூலமோ தமிழில் எழுதலாம். ஆனால் மொபைல் மற்றும் டேப்ளெட்களில் என்ன செய்வது?

உங்களுக்குதவ இதோ வருகிறது ஒரு நல்ல ஆண்ட்ராய்டு மென்பொருள். AnySoftKeyboard with Tamil layout extension. (எனிசாப்ட்கீபோர்டு மற்றும் தமிழ் இணைப்பு)

இதை உங்கள் ஆண்ட்ராய்டு கருவியில் பெற கீழே உள்ள எழிய வழிமுறையைப் பின்பற்றவும்:

1. முதலில் உங்கள் கருவியில் தமிழ் எழுத்துக்கள் சரியாக காண்பிக்கப்படுகிறதா என்று சோதிக்க இந்தப் பக்கத்தை உங்கள் கருவியில் உள்ள browser-இல் பார்க்கவும்.

குறிப்பு: பெரும்பாலனவர்களுக்கு இந்தப் பக்கத்தில் உள்ள தமிழ் எழுத்துகள் சரியாகத் தெரியும். ஒருவேளை இந்த பக்கம் சரியாகத் தெரியவில்லை என்றால், உங்கள் கருவியில் தமிழ் எழுத்துக்களுக்கான font இல்லை என்று பொருள். இதை எப்படிப் பெருவது என்பது இணையத்தில் உள்ளது. அதை நீங்கள் உங்கள் விருப்பப்படி செய்துகொள்ளுங்கள்.

2. கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து எனிசாப்ட்கீபோர்டு மென்பொருளைப் பதிவிறக்கம் செய்யவும். இந்த இணைப்பைப் பயன்படுத்தவும்.

3. எனிசாப்ட்கீபோர்டு தமிழ் இணைப்பை இந்த இணைப்பில் இருந்து பதிவிறக்கம் செய்யவும்.

4.இந்த இரண்டும் உங்கள் கருவியில் install செய்யப்பட்டபின், உங்கள் கருவியில் "Settings -> Language & Keyboard "க்குச் செல்லவும்.

5. அதில்  "AnySoftKeyboard"-ஐ அனுமதிக்கவும்.

6. உங்களிடம் இந்த மென்பொருளை நீங்கள் அனுமதிக்க விருப்பமா என்று கேட்கும். இது பொதுவாக எந்த தட்டச்சு மென்பொருள் பயன்படுத்தினாலும் கேட்கப்படுவதே! இது கட்டற்ற மென்பொருள். ஆகவே, பயமில்லாமல் அனுமதிக்கவும்.

7. இப்பொழுது, sms, browser அல்லது வேறு ஏதாவது எழுத்து உள்ளீடு செய்யும் பகுதிக்குச் சென்று, long press செய்யவும். ஆண்ட்ராய்டு 4+ கருவிகளில் notification பகுதியில் select input method மூலம் இதை செய்யலாம்.

8. ஒத்த ஓசையுடைய எழுத்துக்களை பெற அவற்றை long  press செய்யவும். எடுத்துக்காட்டாக "ஆ" டைப் செய்ய "அ"-வை long press செய்யவும். "ய" டைப் செய்ய "ஐ"-யை long press செய்யவும்.

9. உயிர்மெய் எழுத்துகளைப் பெற மெய் எழுத்தை முதலில் டைப் செய்துவிட்டு பின் அதற்கான உயிரெழுத்து இணைப்பை டைப் செய்யவும். எடுத்துக்காட்டாக "பூ" டைப் செய்ய, "ப" டைப் செய்துவிட்டு, பின் "உ"-வை long press செய்து வேண்டிய துணை எழுத்தைத் தேர்வுசெய்யவும்.

10. "AnySoftKeyboard settings"-இல் "suggestion"-ஐ நிறுத்துவதன் மூலம், உங்கள் தட்டச்சு அனுபவம் மேலும் நன்றாக இருக்கும்.

சிறப்பம்சங்கள்:

1.  முற்றிலும் கட்டற்ற மென்பொருள். விளம்பரங்களோ கட்டணமோ இல்லை. மூல நிரலைப்பெற இங்கே சொடுக்கவும்.

2. ஆங்கில QWERTY தட்டச்சைப் மனதில் கொண்டு வடிவமைக்கப் பட்டது. ஆகவே, எழிதாக நினைவல் வைத்துக்கொள்ளலாம்.

3. ஒரே தொடுதலில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளுக்கிடையே மாற்றிக்கொள்ளலாம்.

4. பயன்படுத்த இணைய இணைப்பு தேவை இல்லை.

5. சிறிய அளவிலான மென்பொருள். வேகமாகவும் இயங்கும்.

6. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்கள். 4+ நட்சத்திர புள்ளிகள் பெற்றது.

இன்னும் என்ன யோசனை? இதை இன்றே பயன் படுத்துங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உலகுடன் தமிழ்லில் பேசுங்கள்/எழுதுங்கள்/பகிருங்கள்.

கருதுக்கள், சந்தேகங்கள் வரவேற்கப்படுகின்றன.