Showing posts with label செயற்கை அறிவுத்திறன். Show all posts
Showing posts with label செயற்கை அறிவுத்திறன். Show all posts

Thursday, June 22, 2017

என் கோள்! என் முடிவு!

எதோ சீயக்காய் விளம்பரம் என்று உங்கள் உலாவியை மூடிவிடாதீர்கள்! சில நாட்களுக்கு முன், "நானே கப்பல்! நானே மாலுமி!" என்ற பதிவில் தானியங்கிக் கப்பல்கள் குறித்து நடந்துவரும் முன்னேற்றங்கள் பற்றிப் பார்த்தோம். தற்போது வந்துள்ள செய்திகளின் படி, நாசா (NASA) அனுப்பிய க்யூரியாசிட்டி ஆளில்லா ஆய்வுக்கலம் (Curiosity Rover) தனாகவே முடுவுகள் எடுத்து ஆய்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. 2012ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டின் நாசா அனுப்பிய க்யூரியாசிட்டி ஆய்வுக்கலம் செவ்வாய் கோளில் உயிர்கள் வாழ்ந்தனவா, வாழ்ந்து கொண்டிருக்கின்றனவா அல்லது வாழும் வாய்ப்பு உள்ளதா போன்ற கேள்விகளுக்கு விடை காணும் பொருட்டு பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.

செவ்வாயில் க்யூரியாசிட்டி எடுத்துக்கொண்ட செல்ஃபீ !
நன்றி: NASA/JPL-Caltech/MSSS

இதுவரை புவியில் இருந்து கட்டுப்படுத்தப்பட்டு வந்த அக்கலம், தற்போது தன்னிச்சையாகச் (Autonomous) செயல்படத் தொடங்கியுள்ளது. ஒரு இயந்திரக்கலத்தின் ஒவ்வொரு செயல்பாட்டையும் வேறு ஒரு கோளில் இருந்துகொண்டு கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். இங்கிருந்து அனுப்பப்படும் ஆணைகள் செவ்வாயில் உள்ள கலத்தை அடைய பல மணிநேரங்கள் ஆகலாம்! தூரம், இடையில் உள்ள தகவல்த்தொடர்பு செயற்கைக்கோள்களின் நிலை (position) போன்றவற்றால் இந்த வகையில் கலத்தைக் கட்டுப்படுத்துவது மிகவும் நேரம் மற்றும் உழைப்பை வீணாக்கும் ஒன்றாக இருந்துவந்தது.

அதனால் ஏற்கனவே திட்டமிட்ட படி செயற்கை அறிவுத்திறன் (Artificial Intelligence) மூலம் இந்தக்காலம் இயங்கத்தொடங்கியுள்ளது. எதேச்சையாக வெவ்வேறு இடங்களை லேசர் ஒளி கொண்டு உணர்ந்து அதில் செயற்கை அறிவுத்திறன் மூலம் ஆய்வுக்குச் சிறந்த இடம் எது என்று அடையாளம் கண்டு அந்த இடத்தை ஆராய்கிறது. இந்த செயற்கை அறிவுத்திறனுக்கு "அதிக அறிவியல் சேகரிப்புக்கான தன்னிச்சையான தேடல்" (Autonomous Exploration for Gathering Increased Science -AEGIS) என்று பெயரிட்டுள்ளனர். இந்த "ஏஜிஸ்" கருவி, 94% நேரங்களில் சரியான இலக்குகளை ஆராய்ந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது!

Monday, June 12, 2017

நானே கப்பல்! நானே மாலுமி!

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சில கப்பல் நிறுவனங்கள் தானியங்கிக் கப்பல்களைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. 2025ஆம் ஆண்டையொட்டி இவ்வகைக் கப்பல்கள் பயன்பாட்டிற்கு வரலாம் என்று நம்பப்படுகிறது. மிட்ஸு ஓ.எஸ்.கே. லைன்ஸ் (Mitsu OSK Lines) மற்றும் நிப்பான் யூஸென் (Nippon Yusen) ஆகிய நிறுவனங்கள் இதில் முன்னணியில் உள்ளன.
செயற்கை அறிவுத்திறன் (Artificial Intelligence - AI) மூலம் கப்பல் செல்ல மிகவும் பாதுகாப்பான, குறைந்த தூரம், நேரம் மற்றும் எரிபொருள் செலவு ஆகும் வழித்தடத்தை தானே கண்டறிந்து பயணிக்கும் வகையில் இக்கப்பல்கள் வடிவமைக்கப் படவுள்ளன. முதல் கட்டமாக ஒரு சிறு ஊழியர்குழு கப்பலுடன் பயணிக்கும். பின்பு நாளாடைவில் முற்றிலும் தன்னிச்சையாக இயங்கும் கப்பல்கள் பயன்பாட்டிற்கு வந்து விடும் என்று துறைசார் நிபுணர்கள் கூறுகின்றனர்.

2020ஆம் ஆண்டுக்குள்ளாகவே தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் (remote controlled) கப்பல்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்று ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கப்பல்த் துறை ஆய்வாளர் ஆஸ்கர் லெவாண்டர் தெரிவித்துள்ளார். என்னதான் தானாகவே இயங்கும் திறன் இருந்தாலும் சில இன்றியமையாத சூழ்நிலைகளில் மனித மாலுமி ஒருவரின் முடிவுகள் தேவைப்படும். அந்நேரங்களில், கரையில் இருந்தே கண்கணிக்கும் ஒரு மாலுமி, வேண்டிய கட்டளைகளை கப்பலுக்கு அனுப்ப முடியும்.

இன்னும் எதிர்காலத்தில் என்னென்ன விந்தைகள் நமக்காகக் காத்திருக்கின்றனவோ!