Showing posts with label இணையம். Show all posts
Showing posts with label இணையம். Show all posts

Thursday, June 29, 2017

தேசியத் தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட கல்வித் திட்டம்

அறிமுகம்:

NPTEL முத்திரை
தேசியத் தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட கல்வித் திட்டம் (The National Programme on Technology Enhanced Learning - NPTEL) இந்திய மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் ஒரு திட்டமாகும். இத்திட்டம் இணையத்தின் மூலம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மேலாண்மை மற்றும் வாழ்வியல் போன்ற பல்வேறு துறைகள் சார்ந்த பாடங்களை காணொளி மற்றும் மின்-கல்வி வழியாக வழங்கிவருகிறது. இது ஏழு இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் (IITs) மற்றும் இந்திய அறிவியல்க் கழகங்களால் (IIScs) முன்னெடுக்கப்படுகிறது. மேலும் பல முன்னணி கல்வி நிறுவனங்கள் இதில் பங்குபெறுகின்றன. இதில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் (AICTE) கல்வித்திட்டம் மற்றும் பல முன்னணி பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்கள்  பின்பற்றப்படுகின்றன.

நோக்கம்:

இத்திட்டத்தின் முதன்மை நோக்கம், பொறியியல் கற்கும் மாணாக்கர்களுக்கு எளிய பாடங்கள் மற்றும் காணொளிகள் மூலம் உதவுவதே ஆகும். பொதுவில், இந்திய இளைஞர்களிடம் அறிவியல் மற்றும் பொறியியல் சார்ந்த அறிவுத்திறனைப் பெருக்குவதன் மூலம் உலக அளவில் அவர்களின் தரத்தை உயர்த்தவும் இத்திட்டம் முனைகிறது.

வரலாறு:

பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் 1999ஆம் ஆண்டு "தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட கல்வி" குறித்த பட்டறை (Workshop) ஒன்று அமெரிக்காவின் கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகத்தோடு (Carnegie Mellon University) இணைந்து நடத்தப்பட்டது. அதன் முடிவில், இந்தியாவிலும் இதுபோன்ற ஒரு தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட கல்விக்கான திட்டத்தின் அவசியம் பரிசீலிக்கப்பட்டு, அதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் தொடங்கப்பட்டன. ஜூன், 2017 நிலவரப்படி, இதில் 1200க்கும் மேற்பட்ட காணொளிகள் மின்-கல்விப் பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

பாடங்கள் பற்றி:

ஒவ்வொரு பாடத்திட்டத்தில் தோராயமாக 40 ஒரு மணி நேரக் காணொளிகள் உள்ளன. இரு மற்றும் முப்பரிமாண அனிமேஷன்கள், பவர் பாய்ண்டு ஸ்லைடுகள், கரும்பலகை மற்றும் இதர கற்பிக்கும் முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

துறைகள்:

வான்வெளிப் பொறியியல், விவசாயம், கட்டடக்கலை, வளிமண்டல அறிவியல், அடிப்படைப் பாடங்கள், கட்டுமானப் பொறியியல், கணினி, மின்னியல், மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பவியல், பொறியியல் வடிவமைத்தல், சுற்றுச்சூழல், பொது, வாழ்வியல் மற்றும் சமூகம், உயிர்த்தொழில்நுட்பம், மேலாண்மை, வேதிப் பொறியியல், வேதியியல் மற்றும் உயிர்-வேதியல், கணிதம், இயந்திரப் பொறியியல், உலோகவியல், சுரங்கப் பொறியியல், கடல் பொறியியல், இயற்பியல் மற்றும் துணிப் பொறியியல் போன்ற பல்வேறு துறைகள் இதில் அடங்கும்.

எழுத்து வடிவில்:

இத்திட்டத்தில் உள்ள எல்லாக் காணொளிகளின் பேச்சுக்களும் எழுத்துவடிவிலும் கிடைக்கிறது. பி.டி.எப்., காணொளி அடியெழுத்துக்கள் மற்றும் காணொளியாற்ற வெறும் பேச்சுக்களாக எம்.பி.3 கோப்புகளாகவும் பதிவிறக்கம் செய்யலாம். இவை அனைத்தும் NPTEL இணையத்தளத்திலேயே உள்ளன. வரும் நாட்களில், காணொளிகளுக்குள் தேடுவது மற்றும் வட்டார மொழிகளில் மொழிபெயர்ப்பு போன்ற வசதிகள் செய்யப்படவுள்ளன.

குறிப்பிடத்தக்க வலைத்தளங்கள்:

1. http://nptel.ac.in  - அதிகாரப்பூர்வ இணையதளம்
2. http://www.youtube.com/iit
3. இணைய இணைப்பு இல்லாதவர்கள் NPTEL.BODHBRIDGE@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புகொண்டு இப்படங்களை குறுந்தகடுகளாகவும் குறைந்த கட்டணத்தில் பெறலாம்.

Sunday, February 26, 2017

தடுப்பூசிகள் தேவையே!

தடுப்பூசிகள் தேவையே! அரசு இலவசமாக வழங்கும் எம்.ஆர். தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது. MR (Measles  Rubella) தடுப்பூசி இரு கொடிய நோய்களில் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாக்கும். பணக்காரர்கள் மட்டுமே பெற்று வந்த MMR ஊசி போன்ற இந்த தடுப்பூசியை இன்று நம் அரசு அனைவருக்கும் இலவசமாக்கியுள்ளது. இதற்க்கு நாம் அரசுக்கும், இதை முன்னெடுத்த எல்லோருக்கும் நன்றி சொல்ல வேண்டும். ஆனால் நடப்பது என்ன?
இன்று கையில் செல்போன் மற்றும் ஜியோ தரும் இலவச இணைய இணைப்பை வைத்துக்கொண்டு ஒரு கூட்டம் தடுப்பூசிகளுக்கு எதிராக எழுதி வருகிறது. இவர்களில் யாரும் (முறையாக மருத்துவம் பயின்ற) மருத்துவர்கள் இல்லை. இவர்களில் பெரும்பாலானோர் போலி அறிவியல் துணையோடு பிழைப்பு நடத்தும் அற்ப ஜந்துக்கள். சிலர் மத/ஆன்மீக வியாபாரிகள். இவர்கள் அனைவரும் நம் நாட்டு அரசையும் அறிவியல் மற்றும் மருத்துவ சமுதாயத்தையும் கேள்விக்குள்ளாக்குகின்றனர். யாரும் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர் கிடையாது. ஆனால் கேள்வி கேட்க ஒரு தகுதியும் நியாமமும் இருக்க வேண்டும். சந்தேகம் வேறு, அவதூறு வேறு. நேற்று நான் ஒரு கடைக்குச் சென்றேன். அருகில் இருக்கும் குழந்தைகள் மருத்துவமனையில் ஒரே கூட்டம். கடைக்காரரிடம் கேட்டேன். அவன் கூறிய பதில் என்னை அதிர வைத்தது. எம். ஆர் தடுப்பூசி அறிவிப்பு வந்த நாள் முதல் இங்கு கூட்டம் அலைமோதுவதாகக் கூறினார். மக்கள் அரசை விட, மருத்துவர்களை விட, அறிவியலாளர்களை விட வாட்சாப்பையும் பேஸ்புக்கையும் நம்பும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்ற சிந்தனை என்னை இப்போதும் நெருடுகிறது.

அலுவலகத்தில் அருகில் இருந்த நண்பரிடம் பேசினேன். அவர் சொல்கிறார் "எல்லா வைரஸும் நிலவேம்புக்கு சாகும். எனவே தடுப்பூசி போடா வேண்டாம்" என்று. நான் கேட்டேன், "போலயோ, பெரியம்மை போன்ற நோய்களை நிலவேம்பு அல்லது இயற்க்கை மருத்துவம் மூலம் முற்றிலும் அளித்திருக்க முடியுமா?" என்று. அவர் "கண்டிப்பாக!" என்றார். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது! பொறியியல் படித்து, 3ஜி, 4ஜி என்று சுத்தும் மேதைகளின் பேதைமை இப்படி! முயற்சியை விடாத நான், "வெறி நாயிடம் கடிபட்டாலும் ஊசி போடா மாடீர்களா?" என்றேன். சுதாரித்த நண்பர் "உங்கள் விதண்டாவாதம் தவறு" என்று முடித்துக்கொண்டார்.
என்ன நடக்கிறது இங்கே? இதை எழுதும் நான் கிறிஸ்தவ மிஷனரி என்றோ (என் பெயரை வைத்து), ப.ஜ.க. கட்சிக்காரர் என்றோ (மத்திய அரசு திட்டத்தை ஆதரிப்பதால்), மருந்துக் கம்பெனிகளின் ஏஜென்ட் என்றோ, ஏன், இல்லுமினாட்டி என்றோகூட முத்திரை குத்தப்படலாம். இவர்களைப் பொறுத்தவரையில் உலகத்தில் நடப்பது எல்லாம் சாதி. எல்லாம் பெரிய சூழ்ச்சியின் பகுதி. கேட்டல் "தனி ஒருவன்", "பூலோகம்" என்று ஜெயம் ரவி படங்களை மேற்கோள் காட்டுவார்கள். ஜல்லிக்கட்டு விஷயத்தில்கூட தமிழர்களின் கலாச்சார உரிமை என்ற நேரடி வாதத்தைவிட ஏ1, ஏ2 புரளிவே போராட்டம் வெடிக்க உதவியது. மீத்தேன் திட்டம், கூடங்குளம் அணுஉலை, நியூட்ரினோ ஆராய்ச்சி, ஹைட்ரோகார்பன் திட்டம் என எதை எடுத்தாலும் ஒரு அறிவியல் புறம்பான நிலைப்பாட்டை நாம் எடுப்பது சரியா? தக்க பாதுகாப்பு அம்சங்களும், நியாயமான நிபந்தனைகளுடன்கூடிய ஒப்பந்தங்களும் வேண்டும் என்று கேட்டால் பரவாயில்லை. நம்மாழ்வார் சொன்னார், செந்தமிழன் சொன்னார், ஹீலர் பாஸ்கர் சொன்னார் என்று ஏதாவது ஒன்றைப் பிடித்துக்கொண்டு நாட்டின் வளர்ச்சியை முடக்குவது சரியா?

நீங்கள் செய்யாவேண்டியது ஒன்றே! துறைசார்ந்த வல்லுநர்கள் கருத்தைக் கேளுங்கள். அதுவும் ஒருவர் இருவர் கூறுவதை மட்டும் அல்ல, பெரும்பான்மை வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள். அதை உங்கள் அடிப்படை அறிவைக்கொண்டு அலசி ஆராய்ந்து பாருங்கள். பின் ஒரு முடிவுக்கு வாருங்கள். தடுப்பூசி என்றால் மருத்துவர், அணுஉலை என்றால் அணு விஞ்ஞானிகள் என்று எல்லாவற்றிற்கும் படித்த வல்லுநர்கள் நிறைந்த நாடு நம் நாடு. அவர்களை விட்டு விட்டு தெருவில் போகும் குடுகுடுப்பைக்காரன் அளவுக்கே அறிவு உள்ள, பயத்தையும் பொய்களையும் மட்டுமே விற்று பிழைப்பு நடத்தும் ஆட்களை நம்பினால் நாம் எப்படி வல்லரசு ஆவோம்?

பல லட்சம் குழந்தைகளுக்குப் போடும் ஊசியில் சதி செய்யும் கேவலமான அரசும் மருத்துவர்களும் உள்ள நாடா இந்தியா? இன்னும் உங்களுக்கு இந்த நாட்டின் மீதும் இங்குள்ள அறிவியல் ஆய்வாளர்கள்மீதும் நம்பிக்கை வரவில்லையா? வர வேண்டாம்... குறைந்தபட்சம் உங்கள் குழந்தை விஷயமான தடுப்பூசியை உங்கள் பேஸ்புக்/வாட்சாப் புளுகு மூட்டைகளை ஓரம் கட்டி வைத்துவிட்டு அருகில் உள்ள மருத்துவரையோ அல்லது துறை சார்ந்த நிபினரையோ கேளுங்கள். அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும், தங்களுக்கும் இந்த ஊசியை போடுகிறார்களா என்று கேளுங்கள். அப்போதாவது உங்களுக்கு புரிந்தால் சரி. எக்காரணம் கொண்டும் உங்கள் மூட நம்பிக்கை ஒரு குழந்தையின் ஆரோக்கியத்தில் விளையாட அனுமதிக்காதீர்கள்.

Friday, August 5, 2016

வேடிக்கையான இணைய விதிகள் 5

நாம் அனைவரும் நம் கருத்துக்கள் (மட்டுமே) சரி என்றும், பிறர் தவறான புரிதலில் உள்ளனர் என்றும், அவர்களை இணைய விவாதம் மூலம் திருத்திவிடலாம் என்றும் எண்ணி, பின்னூட்டங்களையும், பதிவுகளையும் எழுதித் தள்ளுகிறோம். அவற்றையும் விளக்கச் சில விதிகள் உள்ளன. வேடிக்கையாகச் சொல்லப்பட்டாலும் அவற்றில் உண்மையும் உண்டு. அவற்றில் நான் ரசித்த 5 விதிகளை இங்கே குறிப்பிடுகிறேன்.
1. போம்மர் விதி (Pommer's Law)

இணையத்தில் வாசிக்கும் தகவல்களினால் ஒருவரின் கருத்துகளை/எண்ணங்களை மாறலாம். அந்த மாற்றம் அறியாமையில் இருந்து தவறான புரிதலை நோக்கியதாக இருக்கும்.

2. ஸ்கிட் விதி (skitt's Law)

அடுத்தவர் பதிவில் இருக்கும் எழுத்து/இலக்கணம்/நிறுத்தற்குறி (punctuation) தவறைச் சுட்டிக்காட்ட எழுதப்படும் பதிவில், குறைந்தது ஒரு தவறாவது இருக்கும்.

3. தாந்த் விதி (Danth's Law)

ஒருவர் ஒரு இணைய விவாதத்தில் வென்றதாகக் கூறிக்கொண்டால் அவர் அதில் கேவலமாகத் தோற்றுப்போய் இருக்க வாய்ப்பு அதிகம்.

4. காட்வின் விதி (Godwin's Law)

ஒரு இணைய விவாதம் நீள நீள, எதிர் தரப்பை ஹிட்லர்/நாஜி-யோடு ஒப்பிடும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

5. வியப்புக்குறி விதி (Law of Exclamation)

ஒரு பதிவில் எந்த அளவுக்கு அதிகமாக வியப்புக்குறிகளும் பெரிய எழுத்துகளும் (bold/capital letters) இருக்கின்றனவோ அந்த அளவுக்கு அது பொய்யாக இருக்க வாய்ப்பு அதிகம்.