Wednesday, August 9, 2017

வந்தேறிச் செடிகள்!

இன்று எல்லாப் பொருட்களிலும் பழமை நல்லது, புதுமை கெட்டது என்று ஒரு கருத்து நிலவுகிறது. ஏதாவது ஒரு புதிய கண்டுபிடிப்போ, உணவோ, மருந்தோ, உடையோ வந்தால் போதும்! "ஐயோ! நம் முன்னோர்கள் பாரம்பரியம் எல்லாம் போச்சே! பழமையை அழித்துவிட்டோமே! புதியவற்றால் தீமைகள்தான் வரும்!" என்றெல்லாம் முட்டி மோதும் கூட்டம் எங்கிருந்தாவது கிளம்பிவருகிறது. இவர்கள் கூற்றின் படி, நம் முன்னோர்களும் புதுமைகளை ஏற்காமல் இருந்திருந்தால் என்னவாகி இருக்கும்?

வேட்டையாடிய மனிதன் விவசாயத்தைக் கண்டுபிடித்தபோது இதேபோல "நம் முன்னோர்கள் விவசாயம் செய்யவில்லை. விவசாயத்தால் காடுகள் அழியும். அரிசி, கோதுமை போன்ற பயிர்கள் செயற்கையாக மனிதனால் உருவாக்கப்பட்டவை. இவற்றை உண்டால் நோய் வரும்!" என்றெல்லாம் போராட்டம் நடந்திருந்தால் என்னவாகி இருக்கும்? அல்லது நெருப்பை மூட்ட மனிதன் கற்ற காலத்தில், "நெருப்பு ஆபத்தானது! அதை நம் வீட்டுக்குள் கொண்டு வருவது கூடாது! அதனால் காற்று மாசு படுகிறது!" என்று ஒரு கூட்டம் கோஷம் போட்டிருந்தால் எப்படி இருக்கும்? இப்படியே சக்கரம், படகுகள், ஆடை, சமைத்த உணவு, உணவில் உப்பு சேர்ப்பது போன்ற ஒவ்வொரு மாற்றத்தையும் பழமைவாதிகள் எதிர்த்திருந்தால் நாம் இன்று மகிழ்ச்சியாக மரத்தில் தாவிக்கொண்டு இருந்திருக்கலாம்!

இப்படிப் பழம்பெருமை பேசும் பலருக்கும், நம் முன்னோர்கள் புதுமையை வரவேற்று ஏற்றுக்கொண்டு முன்னேறியவர்கள் என்பது தெரியாது. இன்று அவர்கள் பழமை என்று தூக்கிப்பிடிக்கும் பலவும் சில நூற்றாண்டுகளுக்கு முன் புதுமையாக நம் முன்னோர்கள் பார்த்தவையே! "நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல!" என்ற இவர்கள் கூற்றுப்படியே பார்த்தாலும், நம் முனோர்களைப் போல நாமும் புதுமையைக் கண்டு அஞ்சாமல், அதை ஆராய்ந்து ஏற்பதே நல்லது.

அவ்வகையில் நம் முன்னோர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன் ஏற்றுக்கொண்ட புதுமைகள் சிலவற்றைப் பார்ப்போம். இந்தப் புதுமைகள் இன்று எவ்வாறு பழமைகளாகப் பார்க்கப்படுகின்றன என்று கவனியுங்கள். ஒரு குறுகிய வலைப்பதிவில் எல்லாவற்றையும் சொல்ல முடியாததால், 1492ஆம் ஆண்டு கிறிஸ்டோபர் கொலம்பஸ், அமெரிக்க கண்டங்களைக் கண்டறிந்த பின், அக்கண்டங்களில் இருந்து ஐரோப்பியர்கள் மூலம் நம் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சில தாவர வகைகளை மட்டும் பார்ப்போம். அதாவது, ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன், இந்தத் தாவரங்களோ அவை தரும் காய்கனிகளோ, நம் முன்னோர்கள் பார்த்திருக்கக் கூட மாட்டார்கள். ஆனால் இந்தப் பட்டியலில் உள்ள பலவும் இன்று நம் "பண்பாடு, பாரம்பரியம், மரபு" வட்டத்துக்குள் இருப்பதைக் கவனியுங்கள். இன்னும் 500 வருடங்களில், பிட்சாவும், நூடுல்சும் நம் பரம்பரியமானாலும் வியப்பதற்கல்ல!

குடை மிளகாய் - சில்லி சிக்கன் முதல் பச்சடி வரை...

முந்திரிப்பருப்பு - இது இன்று நம் பாரம்பரிய உணவாகப் பார்க்கப்படும் ஒன்று. முந்திரி பக்கோடா, முந்திரி அல்வா, முந்திரி ஸ்வீட், பொங்கல், லட்டு, பாயசம்,புலவு என்று நம் பாரம்பரிய உணவுகள் பலவும் முந்திரியால் சிறப்புப் பெறுகின்றன. "முந்திரிக்கொட்டை போல" என்ற வழக்கும்கூட நம் மொழியில் இருப்பது வியப்பே!

மிளகாய் - மீன்குழம்பு, சாம்பார், சட்டினி, வடை, இட்டிலிப் பொடி இப்படி எது எடுத்தாலும் மிளகாய்ப் பொடி இல்லாமல் ருசிக்குமா? ஒருநாள் உங்கள் சமையலறையில் மிளகாய்ப் பொடி டப்பாவை ஒளித்துவைத்துவிட்டு சமையல் செய்ய முயலுங்கள். நீங்கள் தமிழரின் பாரமபரிய உணவுகள் என்று நம்பும் பலவும் இந்த அமெரிக்க இறக்குமதி இல்லாமல் சமைக்க முடியாது! இதில் இந்த மிளகையைக் கொண்டு திருஷ்டி கழிப்பது, வாகனங்களைப் பாதுகாப்பது போன்ற விஞானங்கள் வேறு! 500 வருடங்களுக்கு முன் இல்லாத இந்தப் பழக்கங்கள் இன்று நம் பண்பாடு என்று சொல்லும் மனிதர்களை என்னவென்பது?

சீதா/ராமன்-சீதா பழம் - பெயரளவில் நம் நாட்டு இதிகாசங்களின் தாக்கம் இருந்தாலும் இதுவும் வெறும் 500 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் இருந்து இறக்குமதியானதே!

கொய்யாப் பழம் - நம் ஊர்களில் பாட்டிகள் கூடை தூக்கி விற்பார்களே! அதேதான். அதுவும் அமெரிக்க இறக்குமதியே!

மக்காச் சோளம் - இரும்புச் சோளம் மற்றும் இதர சோளங்கள் ஏற்கனவே இருந்தாலும், மக்காச் சோளம் புதுவரவே! இதில் நாட்டு மக்காச் சோளம், அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் என்று நாம் வகை பிரித்தாலும் இரண்டுமே அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டவையே!

மரவள்ளிக் கிழங்கு - கிராமிய உணவாகப் பார்க்கப்படும் இதுவும் சில நூற்றாண்டுகளாக இங்கு வந்தேறிய பயிர்!

பப்பாளி - மெக்சிக்கோ நாட்டைத் தாயமாகக் கொண்ட மரம். இந்த மரத்தின் இலைச்சாறு டெங்குவைக் குணப்படுத்தும் என்று அரசாங்கமே விளம்பரம் போடுகிறது. ஆனால் இதன் தாயகமான மெக்சிக்கோவிலோ டெங்குவிற்கு தடுப்பூசி போடுகிறார்கள்!  இதைச் சிலர் சித்த மருத்துவம் என்றுகூடச் சொல்கிறார்கள். எந்தச் சித்தர் எந்த நூலில் பப்பாளி பற்றிக் குறிப்பெழுதியுள்ளார்? சுட்டிக்காட்டினால் நன்றாக இருக்கும்.

நிலக் கடலை - கடலை போடுவது முதல் "பாரம்பரிய மரச்செக்கு கடலெண்ணெய்" வரை கடலை நம் உணவிலும் வாழ்விலும் கலந்த ஒன்று. ஆனால் ஒரு 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் முன்னோர்கள் இதைக் கண்ணால்கூடப் பார்த்ததில்லை! கடலை மிட்டாய், கடலை எண்ணெய் பலகாரம் இதெல்லாம் நம் பாரம்பரியம் என்று நம்புபவர்கள் பலர். உண்மையில் இது சில நூற்றாண்டுகளுக்கு முன் வெள்ளையர்களால் கொண்டுவரப்பட்ட பயிரே!

அன்னாசிப் பழம் - எனக்கு மிகவும் பிடித்த பழம். தனியாக ஒரு முழு பழத்தைக் கூட சாப்பிட்ட நாட்கள் உண்டு! பிரேசில் நாட்டைத் தாயகமாக் கொண்டது இப்பழம்.

உருளைக்கிழங்கு - மற்றுமொரு "பாரம்பரியம்". பூரி கிழங்கு முதல் ஆலு பரோட்டா வரை! வட நாட்டின் உயிர் மூச்சான இந்த "ஆலு" அமெரிக்காவில் இருந்து வந்த "விதேசி" பயிர். அமெரிக்க விதேசி பயிரான உருளைக்கிழங்கைத் தடை செய்துவிட்டால் வடாஇந்தியர்கள் பாடு திண்டாட்டம்தான்!

பூசணி - பரங்கிக்காய் (வெள்ளைப் பூசணி ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது!)

சப்போட்டா - "சிக்கு" என்று வடஇந்தியர்களால் (வடஇந்தியத் தாக்கம் உள்ள தமிழர்களினாலும்) அறியப்படும் இப்பழம் மெக்சிகோ இறக்குமதி.

சூரியகாந்தி - எண்ணெய் வித்தாகப் பயன்படும் இப்பயிர் வடஅமெரிக்க கண்டத்தில் இருந்து வந்தது.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு - பெயரைக்கேட்டால் தூய தமிழாகத்தான் உள்ளது... ஆனால் சொந்த ஊர் தென்-அமெரிக்கா.

புகையிலை - புகையிலைப் பாக்குகளைக் குதப்பி, அங்கங்கு துப்பி வைப்பது வடஇந்தியர்கள் நடமாடும் பகுதி என்பதன் அடையாளம் என்று சொல்லும் அளவுக்கு நம் "கலாச்சாரத்தில்" கலந்தது இந்தப் புகையிலை. வெற்றிலையோடு புகையிலை போடும் பழக்கம் தமிழகத்திலும் இருந்தது (இன்னும் சிலரிடம் இருக்கிறது). எல்லாவற்றிற்கும் மேல், சில தெய்வங்களுக்கு சுருட்டு படைத்து வழிபாடும் வழக்கம் உள்ளது. இந்த எல்லா "பாரம்பரியங்களும்" வெள்ளைக்காரன் கொண்டுவந்த உயிர்கொல்லிப் புகையிலைமீது கட்டப்பட்டுள்ளது!

தக்காளி - கிலோ 120 ரூபாய் விற்றாலும் தக்காளி இல்லாமல் சமையல் செய்ய முடியாமல் வங்கியில் கடன் வாங்கியாவது தக்காளி வாங்குகிறோம் அல்லவா? அந்தத் தக்காளியும் வெள்ளைக்காரன் கொண்டுவந்ததுதான். ரசம், சாம்பார், குழம்பு என்று நீக்கமற நம் உணவில் நிறைந்துள்ள தக்காளி நம் முன்னோர்களுக்கு ஐரோப்பியர்கள் அறிமுகப்படுத்தியபோது புதுமையாகவே இருந்திருக்கும்.

முன்பே கூறியது போல நாம் இயல்பாக நம் மரபு, பண்பாடு, பாரம்பரியம் என்றெல்லாம் நம்பும் பலவும் நம் முன்னோர்களுக்கு புதியவையாகவும் அந்நியமாகவும் இருந்தவையே! அவர்கள் நம்மைப்போல முன்னோர் பெருமை பேசி இந்தப் புதுமைகளை ஏற்காமல் விட்டிருந்தால் வத்தல் குழம்பும் வஞ்சிர மீன் வறுவலும் நம் உணவுகளாக இருந்திருக்காது! புதுமைகள் எல்லாமே தீமை என்று எண்ணி அஞ்சாமல் அவற்றில் நல்லவற்றை எடுத்து தீயவற்றைத் தவிர்ப்போம்!

2 comments:

Red flame said...

நல்ல தொகுப்பு.ஆதாரங்களையும் பின் இணைப்பாக அளித்தால் பயனுள்ளதாக இருக்கும்.

David S said...

Thanks... You can Google "Columbian Exchange".

https://www.scholastic.com/teachers/articles/teaching-content/columbian-exchange-overview/

https://scholar.harvard.edu/files/nunn/files/nunn_qian_jep_2010.pdf