Saturday, July 2, 2016

மீன்களில் பாதரசம்

மீன் ஒரு நல்ல உணவு. உடலுக்குத் தேவையான புரதம், இதயத்துக்கு இதமான ஒமேகா-3 (ஒமேகா-3) என்னும் நல்ல கொழுப்பு, வைட்டமின் பி  வரிசைச் சத்துக்கள் என்று மீன் உணவு உள்ளடக்கியுள்ள சத்துக்கள் ஏராளம். ஆனால் ஒன்றில் நாம் கவனமாக இருக்க வேண்டும். மீன்களில் சிலவற்றில் பாதரசம் அளவு அதிகம் இருக்கும். அவ்வகை மீன்களை கர்ப்பிணி/பாலூட்டும் பெண்களும் 15 வயதுக்குக் கீழ் உள்ள சிறுவர்களும் அரைவே தவிர்ப்பது நல்லது. மற்றவர்களும் அளவுடன் சாப்பிடுவது நல்லது. இதைப் பற்றி விரவாகப் பார்ப்போம்.

பாதரசம் - ஒரு பார்வை:


பாதரசம், இதளியம் அல்லது இதள் (mercury) ஒரு உலோகம். அறை வெப்பநிலையில் திரவமாக இருக்கக்கூடிய உலோகம். தூய பாதரசமும் அதன் பெரும்பாலான வேதிச் சேர்மங்களும் கொடிய நச்சுத்தன்மை கொண்டவை. இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகள் இதை மருந்தாகப் பார்த்தாலும் அறிவியல் இதை நஞ்சு என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிறுவியுள்ளது. குறிப்பாக மீனில் உள்ள மெத்தில் மெர்குரி (methyl mercury) என்னும் சேர்மம் நம் உடலிலேயே தேங்கி இருக்கக்கூடியது. நம் அனைவரின் உடலிலும் வெகு வெகு சிறிய அளவு பாதரசம் உண்டு. ஆங்கிலத்தில் இதை trace amount  என்று கூறுவர். அதே போல நாம் உண்ணும் அனைத்து மீன்களிலும் பாதரசம் உண்டு. ஆனால் பெரும்பாலான மீன்களில் அது பாதுகாப்பான அளவிலே இருக்கும். சில மீன்களில் அது தீங்கு விளைவிக்கக்கூடிய அளவில் இருக்கும். இதனால் மூளை மற்றும் நரம்பு மண்டலம் பாதிக்கப் படலாம். ஆகவே மூளை மற்றும் நரம்பு மண்டலம் வளரும் நிலையில் இருக்கும் சிறுவர்கள் மற்றும் கருவில் இருக்கும் குழந்தைகள் பாதரசத்தால் அதிகம் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது.


எவை எல்லாம் ஆபத்தானவை?

பொதுவாக நன்னீர் மீன்களைவிட கடல் மீன்களே பாதரசம் அதிகம் உள்ளவையாகக் காணப்படுகின்றன. குறிப்பாக கடலிலும் தாவர பட்சி மீன்கள் பெரும்பாலும் மிகக் குறைந்த பாதரச அளவு கொண்டவையாக உள்ளன. அதேபோல பெரிய மீன்களில் சிறிய மீன்களைக் காட்டிலும் பாதரசம் அளவு அதிகமாக இருக்கும். அதற்கான காரணம் பின்வருமாறு.
நன்றி: விக்கிமீடியா
1. எல்லா மீன்களிலும் பாதரசம் உண்டு. அது மெத்தில் மெர்குரி வடிவில் இருக்கும்
2. ஒரு மீன் மற்றொரு மீனைத் உண்ணும்போது உண்ணப்படும் மீனில் உள்ள மெத்தில் மெர்குரி உண்ணும் மீனின் உடலில் சேருகிறது.
3. ஏற்கனவே சொன்னதுபோல ஒருமுறை உடலில் சேரும் மெத்தில் மெர்குரி உடலிலேயே தங்கிவிடுகிறது.
4. அதிகமான மீன்களை உண்ண உண்ண, நாட்கள் செல்லச் செல்ல, அளவு வளர வளர அதிக அளவு மெத்தில் மெர்குரி சேர்ந்து விடுகிறது.

நெய்மீன்(கடல் மீன், நெய் கெளுத்தி மீன் நன்னீர் மீன்), வஞ்சரம், சுறா, ஊளி, சீலா, முரல் போன்ற மீன்களில் அதிக பாதரசம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை கர்ப்பிணிகள், பால் கொடுக்கும் பெண்கள், 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் உண்ணக்கூடாது. மற்றவர்கள் அளவாகவும் இடைவெளி விட்டு உண்ண வேண்டும் (மாதம் 2-4 முறை, 100-200 கிராம், அளவுகள் மீனின் வகை மற்றும் பருமன் பொறுத்து மாறலாம்!).

இறால், நண்டு, விலை, பாறை, மத்தி, வாவல் போன்ற தாவரம் உண்ணும்/சிறிய மீன்கள் மிகவும் குறைந்த அளவே பாதரசம் கொண்டவை. இவை பாதுகாப்பானவை.

கட்லா, மிருகால், ரோகு, சிலேபி, கெளுத்தி, அயிரை போன்ற நன்னீர் மீன்கள் அனைத்தும் பாதுகாப்பானவை.

**பால் கொடுக்கும் தாய்க்கு சுறா மீன் கொடுப்பது மரபுவழி வழக்கமாக இருக்கலாம். ஆனால் அறிவியலின் பார்வையில் அது ஆபத்தானது. ஆகவே உங்கள் வீட்டில் அதுபோல யாரேனும் சொன்னால் அவர்களுக்கு நீங்கள் விளக்கிக் கூறுங்கள். மரபை விட மனிதனின் நலமே முக்கியம்!

முடிவாக

மீன்கள் நல்ல உணவாக இருந்தாலும், அவை சில சமயங்களில் உடலுக்குத் தீமை செய்யும் நச்சுப் பொருட்களையும் கொண்டிருக்கலாம்! ஆனால் அறிவியலின் துணையோடு ஆராய்ந்து சரியான மீன்களைத் தேர்ந்தெடுத்து உண்டால் நலமும் வளமும் நமதே!

No comments: